வெல்லாவெளியில் 38 வயதான சுகிதரன் சடலமாக மீட்பு! Video
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) காலையில் மீட்டதுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பிளாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடைய தியாகராசா சுகிதரன் (கண்ணன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (27) இரவு அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் இன்று காலை திக்கோடை சந்திக்கு அருகாமையிலுள்ள வீதியிலுள்ள மதகு ஒன்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் கீழே வீழ்ந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு வீதியால் பிரயாணித்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




