வவுனியாவில் நுண்கடன் அதிகாரிகள் பெண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் !
வுனியா – சாந்தசோலைப் பகுதியைச் சேர்ந்த நுண்நிதி நிறுவனங்களில் கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களிடம் அந்நிறுவனப் பணியாளர்கள் அடாவடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள நுண்நிதி கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களின் வீடுகளுக்கு நேற்று மாலை நுண்நிதி நிறுவனப் பணியாளர்கள் இருவர் சென்றுள்ளனர்.
இதன்போது நுண்நிதி கடன் பெற்றுக்கொண்ட குடும்பப் பெண்களிடம், பெற்றுக்கொண்ட கடன் பணத்தை தண்டப்பணத்துடன் செலுத்துமாறும் தவறினால் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நுண்நிதி நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அப்பெண்கள், மாலை நேரங்களில் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடுவது பிரதேச செயலகத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது என நுண்நிதி நிறுவனப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு நுண்நிதி நிறுவனப் பணியாளர்கள், அவ்வாறான ஆவணங்கள் ஏதும் உங்களிடம் இருந்தால் காண்பிக்குமாறு கோரியுள்ளதுடன், தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனத்தின் பணியாளர்களின் அடாவடித்தனங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பணம் பெற்றுக்கொண்ட பெண்கள் கோரியுள்ளனர்.
கடந்த பல மாதங்களுக்கு முன்னர் சாந்தசோலைப்பகுதிக்குச் சென்று நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்கும் வீடுகளுக்குச் சென்று பணம் அறிவிடுவதையும் தமது கிராமத்திற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடன் பெற்றுக் கொண்ட சிலரினால் செலுத்தப்படாமலிருந்த நிலுவைப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த சில தினங்களாக அப்பகுதிகளுக்குச் சென்ற நுண்நிதி நிறுவனப் பணியாளர்கள் அவதானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அப்பகுதிப் பெண்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சாந்தசோலை பெண்களின் இக்குற்றச்சாட்டுக் குறித்து நுண்நிதி நிறுவனத்தின் முகாமையாளரை தொடர்புகொண்டு வினவிய போது,
நேற்று மாலை சாந்தசோலைக் கிராமத்திற்கு பணம் அறவிடுவதற்காக எமது நிறுவனத்தின் பணியாளர்கள் செல்லவில்லை.
இறுதி நினைவூட்டல் கடிதத்தினை வழங்குவதற்காக அங்குள்ள வீடுகளுக்குச் சென்றதாகவும், பிரதேச செயலகத்தினால் நிறுவனங்களுக்கு மாலை 5 மணியின் பின்னர் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிட வேண்டாம் என்று கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக முகாமையாளர் என்ற ரீதியில் தமது நிறுவனத்தில் கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.