ரீவி, சிலிண்டரைக் கொள்ளையடிப்பதற்காக குடும்பஸ்தரைக் கொன்ற கொள்ளையன்!! பாணந்துறையில் சம்பவம்!!
வீடொன்றில் கொள்ளையடிக்க வந்த நபர் ஒருவர் வீட்டின் உரிமையாளரைக் கொன்று சடலத்தை வாழைமரங்களின் அடியில் மறைத்து வைத்துவிட்டு வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் பாணந்துறை மினுவன்பிட்டிய கஜபா மாவத்தையில் வசிக்கும் டொனா டாமன் ஜயரத்ன என்ற 77 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்தவர். மனைவியுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று (21) வீட்டிலிருந்து வெளியில் சென்ற மனைவி, திரும்பி வந்து பார்த்த போது கணவர் வீட்டில் இல்லாததை அறிந்து, பாணந்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி நேற்று (21) குறித்த வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது, தோட்டத்தில் வாழைமரப் புதருக்குப் பின்னால் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

