உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்–
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். பிரேமதாசா அவர்களின் ஆட்சியில் இளைஞர் விவகார மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக ரூபாவகினியில் அடிக்கடி உங்களை பார்த்ததுண்டு. மிகவும் அமைதியான உங்கள் சுபாவம் எனக்கு பிடித்தது.
இந்த சுபாவங்களின் அடிப்படையிலேயே 2002 இல் உங்களின் சமாதான ஒப்பந்ததில் அபரீதமான நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அதன் பின் நீங்கள் நடத்திய நாடகங்கள் உங்கள் மீதான அபிமானத்தை குறைத்து விட்டது. நிச்சயமாக கூறுகிறேன் இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினை முடித்து வைத்த தலைவர் நீங்களே.
முடங்கி கிடந்த நாட்டை நிமிர்த்திய உங்கள் சாமர்த்தியம் யாருக்குமே வராது. நிச்சயமாக உங்கள் பெயரை வரலாறு பேசும்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில்தான் இலங்கையில் இன கலவரங்கள் நடந்த போதும், சன னா யகத்தின் அடிப்படையே கட்சி அரசியல் என்ற ரீதியில் இலங்கைக்கு பலமான கட்சிகள் தேவை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. இலங்கையின் உள்நாட்டு போர் தீவிரமாக இடம்பெற்ற காலத்திலும், எங்கள் கிராமங்களில் போராளிகளின் செல்வாக்கு மிகுந்திருந்த நாட்களிலும், ஐக்கிய தேசிய கட்சிக்கு தங்கள் வாக்குகளை அளிக்கும் அன்பர்கள் நிறையவே இருந்தனர். அதே போல முன்னாள் அமைச்சர்கள் திரு. S. ராசதுரை, தேவநாயகம் போன்றோர் உங்கள் கட்சியில் இருந்தபடியே எங்கள் பகுதிகளுக்கு இயன்றதை செய்தனர்.
இன்று பாருங்கள் இலங்கையில் ஏதாவது உருப்படியான கட்சி உள்ளதா? நல்ல வேளையாக உங்கள் பார்வையில் இருந்து தப்பிய கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே எஞ்சியது. அதனை நீங்கள் குறைத்து மதிப்பிட்டது இதன் காரணமாக இருக்கலாம்.
இலங்கையில் சுதந்திர கட்சி, பொது ஜன பெரமுன (இது ஒரு குடும்பத்தின் கட்சியாக சிதறியது மகிழ்ச்சிதான் ) என ஒன்றுமே மிச்சம் இல்லை. இத்தனைக்கும் யார் காரணம் என்றால் உங்களுக்கு கோபம் வரும்.
கடந்த தேர்தலில் சஜித் அவர்களை ஐ. தே. க சார்பில் இறக்கி விட்டு நீங்கள் பார்த்த வேலைகளை மறக்க முடியாது. அந்த மனிதர் ஏதோ தன்னால் இயன்ற வரைக்கும் செய்திருக்கிறார். மொனராகலை, இரத்தினபுரி, பதுளை மாவடட்ங்களில் முன்னேற்றம் தெரிகிறது.
உங்களால் இனிமேல் சிதைந்து போன ஐ. தே. க இனை கட்டியெழுப்ப முடியாது. உங்கள் காலத்தில் நீங்கள் செய்ய கூடிய நல்ல விடயம் யாதெனில் இருக்கும் மிகுதி துண்டு கட்சியை சஜித் அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் புண்ணியமாக போகும்.
மறு புறத்தே எல்லா விடயங்களையும் நரித்தனமாக கையாளும் உங்கள் சுபாவம் மற்றும் இதனால் பாதிப்புற்ற மக்களின் கண்ணீரே நியூட்டனின் மூன்றாம் விதியாக உங்களை பாதிக்கிறது என்றால் அதனையும் ஏற்கத்தான் வேண்டும்.
நீங்கள் நல்ல சனனாயகவாதி. ஆனால் உங்களை சூழ இருந்தோர் யாவரும் அதே “பழைய மனிதர்களே”. அந்த வகையில் இலங்கை தப்பி விட்டது என்றே கூறலாம்.
உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள். சென்று வருக.

