ஆறடி உயர ஆஜானபாகுவானும், இரக்கம் என்பதே துளியுமில்லாத ரஞ்சன் விஜேரட்னவால் கொல்லப்பட்ட ஜேவிபி தலைவர்!! நடந்தது என்ன?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
ஆறடி உயர ஆஜானபாகுவானும், இரக்கம் என்பதே துளியுமில்லாத கடின சித்தம் கொண்ட பேர்வழியுமான பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ன , 1989ம் ஆண்டு ஜேவிபி தலைவர் ரோஹன விஜேவீரவுடன் சேர்த்து ஜேவிபி இன் இன்னிங்ஸை முடித்து வைத்த போது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிடம் இப்படித்தான் சொன்னார்.
அப்போது இருபத்தொரு வயதான அநுரகுமார என்ன செய்து கொண்டு இருந்து இருப்பார் என்று தெரியாது.அவரது சகோதரர் கொல்லப்பட்டு, வீடு எரிக்கப்பட்டு இருந்தது. எங்கேயாவது காட்டுக்குள் ஒளிந்து இருந்து இருப்பார்.
பவர்புல் கெபினட் அமைச்சரான ரணில் A2/1 படலந்தை உத்தியோகபூர்வ சுற்றுலா விடுதியில் சொகுசாய் தூங்கிக் கொண்டு இருந்து இருக்கக் கூடும்.
சஜித் பிரேமதாஸ லண்டனில் இருந்து கொண்டு தன் தந்தையின் கெட்டித்தனத்தை நினைத்து மகிழ்ந்து போய் இருந்து இருப்பார்.
விதி எவ்வளவு கொடியது பாருங்கள் . ஐக்கிய தேசியக் கட்சி நாளடைவில் சிதறிப் போனது.ரணசிங்க பிரேமதாஸவின் அத்தனை கெட்டகேட்டுக்கும் துணை போய் அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அரணாய் நின்று பாதுகாத்த ரணிலை எதிர்த்துக் கொண்டு , பிரேமதாஸவின் மகன் சஜித் தேர்தலில் குதித்தார்.
தாங்கள் தடயமே தெரியாமல் ஒழித்துக் கட்டிய கூட்டத்தின் கடைசி வாரிசு அநுரவுடன் இவர்கள் மோதினார்கள்.
என்னதான் அரசியல் வியாக்கியானம் எழுதினாலும் மணித்தியாலக் கணக்கில் political Analysis செய்தாலும் எல்லாவற்றையும் மீறிய ஒரு இயற்கை நியதி ஒன்று இருக்கிறது. அதுதான் அநுரகுமார விசயத்தில் நடந்தது. நீதி ஒரு நாள் வெல்லும் என்பார்கள். இது சும்மா சாதாரண நீதி அல்ல.. தங்களை முற்றாய் ஒழித்துக் கட்ட ஆணையிட்ட இலங்கையின் உச்ச அதிகாரத்தையே பெறுமளவுக்கு அந்த நீதி அநுரவுக்கு துணை போய் இருப்பதுதான் இங்கே அதி சிறப்பு.
இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல்.

JVP இன் ஆரம்பம் முதல், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டது வரை, அந்த இயக்கத்தின் வரலாற்றையும், அதன் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் கோரத் தேடலையும், அதன் பின்னரான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கையையும் என்று அந்த இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும்.
போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பெளவியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்!
வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள். தமிழர்களுக்கு அது புரியும்.
காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போதும் திரும்பலாம். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிசயம் சொல்லாமல் கொள்ளாமல் நம் வானத்தில் உதிக்கலாம்.
இதற்கு அநுரவே பெரும் சாட்சி.

