யாழில் அகப்பைக் காம்பால் மாணவிகளை துவைத்தெடுத்த அருட்சகோதரி சிறையில்!! பெற்றோருக்கு அழுத்தம்!! நடந்தது என்ன?
யாழில் அகப்பை காம்பால் மாணவிகளை கொடூரமாகத் தாக்கிய அருட்சகோதரி சிறைக்குள்!! அப்பா, அம்மாக்கள் ஊடாக அழுத்தமா? நடந்தது என்ன?
யாழ்ப்பாணம், தீவக கல்வி வலயத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில், விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீவகம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை, கரம்பன், லிட்டில் ஃபிளவர் பெண்கள் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவிகளில், விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளே தாக்கப்பட்டுள்ளனர்.
விடுதிக்கு பொறுப்பான கிறிஸ்தவ அருட்சகோதரியின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் நேற்று (27) ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
10 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
கடந்த 3 வருடங்களாக தாம் கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
அகப்பை காம்பு, தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.
ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன், பாடசாலை மாணவிகளுடன் உரையாடக்கூடாத கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்டும், பலனில்லாத நிலையில், நேற்று 11 மாணவிகளும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசலை சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவநாதனின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவிகள் ஊர்காவற்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, பாடசாலை நிர்வாகத் தரப்பினர், முறைப்பாடளித்த மாணவிகளின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்து, முறைப்பாட்டை வாபஸ் பெற முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகள், மருத்துவமனையிலும், பொலிசாரிடமும் குறிப்பிட்டுள்ளனர். முறைப்பாடளித்ததற்காக தமது பெற்றோர் தம்மை திட்டுவதாகவும் குறிப்பிட்டனர்.
இந்த விவகாரம் இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவிகளுடன், இன்று இரவு பெற்றோர் தொடர்பு கொள்வதை தடுத்து உத்தரவிட்டார். நாளை வைத்தியசாலைக்கு நீதிபதி நேரில் சென்று மாணவிகளுடன் உரையாடும் வரை, மாணவிகளுடன் பெற்றோர் தொடர்பு கொள்வதை தடுத்து நீதிபதி உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட பாடசாலையில் குறைந்த கட்டணத்தில் விடுதி வசதி வழங்கப்படுவதால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பலனடைந்ததாகவும், அவர்கள் பாடசாலை நிர்வாகத்தை பகைக்க விரும்பாமல், முறைப்பாட்டை வாபஸ் பெறும் அழுத்தத்திற்க அடிபணிந்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.