புதினங்களின் சங்கமம்

இயக்கத்திலிருந்து பிரான்ஸ் ரூபனின் கொழும்பு உணவகத்தில் கண்ணா மீது துப்பாக்கிச் சூடு ஏன் நடந்தது?

கொழும்பு, மோதரையில் உணவகம் ஒன்றை நடத்தும் நபர் ஒருவர் மீது நேற்று முன்தினம் (13) இரவு உணவகத்திற்கு முன்பாக வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அந்த நபர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய குழு பயணித்த வெள்ளை நிற கார் ஜா-எலவுக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மோதர வீதியில் அமைந்துள்ள குட்ஃபுட் உணவகத்தின் முகாமையாளர் சுடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உணவகத்தின் முன் நின்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான உணவகத்தை நடத்தும் கொழும்பு 14, மஹவத்தையைச் சேர்ந்த ஆர். உமேஷ் கண்ணா (52) என்பவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலது தோள்பட்டை, கழுத்து, காலில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உணவகத்தின் முகாமையாளர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் உள்ள சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்ததாக இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் குழுக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த உணவகத்தை சுடப்பட்டவரே நடத்துகிறார். ஆனால் உண்மையான உரிமையாளர் பிரெஞ்சு ரூபன் என்ற சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரியெனவும், அவர் தற்போது பிரான்சில் தங்கியிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்றும் கூறப்படுகிறது. பிரஞ்சு ரூபனுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு தற்போது பிரிந்து செயற்படும் மோதர நிபுனவின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் கடத்தல்காரன் நிபுண தற்போது டுபாயில் இருப்பதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சுடப்பட்டவரின் உறவினர் நிபுண குழுவிடம் போதைப்பொருள் வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் விட்ட மோசடியினாலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.