நல்லாத் தானே இருந்தான் ஏன் தற்கொலை செய்தான்.
இந்த ஒரு வார்த்தையுடன் ஒரு தற்கொலையை செய்தியாக கடந்துவிட முடியாது. தற்கொலை செய்வது, கோழைத்தனம், அனைத்துக்கும் தீர்வு இருக்கு என்று சொல்வது சரிதான்.
ஆனால் எவர்? அவன் உயிருடன் இருக்கையில், அவனுடைய பிரச்சினையை தீர்த்து வைப்பதிலும், அவனுக்கு தேவையானதை நிறைவேற்றுவதிலும் பங்காற்றினீர்கள், என்றால் விடை பூச்சியம்.
மாறாக அவனுக்கான பிரச்சினைகளை கூட்டுவதிலும் தற்கொலை செய் என்று தூண்டுவதனையும் இந்த சமுதாயம் செய்கின்றது.
பசிப்பவனுக்கு சோறு கொடுக்க தயக்கம் காட்டுபவர்கள், படுப்பதற்கு தலையாணை கொடுத்து பயனில்லை. பசி போனால் தான் தூக்கம் வரும்.
80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் ஒரு மாம்பழம் வாங்கினவனும்,சாப்பிட இல்லாமல் தற்கொலை செய்தவனும் இங்கு தான் உள்ளார்கள்.
தற்கொலை வரையில் செல்ல துணிபவன், குறிப்பிட்ட செயலில் புனிதமாகவும், இதய சுத்தியுடனும் இருந்து இருப்பான். அதில் நேர்மை இருந்து இருக்கும். காதலோ, பணத்தேவையோ, வாழ்க்கையின் எதிர்பார்ப்போ, உறவுகளின் பிரிவோ, வேலை கிடைக்காமையே, தனக்கான சுதந்திரமோ என்னவாகவும் அது இருக்கலாம்.
தற்கொலை வரையில் செல்பவன் தனக்கான பிரச்சினையில் அல்லது எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு எல்லை வரையில் சென்று இருப்பான்.
என்னடா இது உலகம் என்று இயலாத நிலையில் தற்கொலையை ஒரு வழியாக தெரிவு செய்திருப்பான்.
இருக்கும் வரையில் அவனவனின் இயலுமையை கொண்டாடுவதற்கு எமது சமுதாயம் தயாராகவில்லை. அப்படியிருக்கையில் இறந்த பின்னரா அனுதாபங்களும் விளக்கங்களும் தேவையற்றவை.
இந்த உலகில் சரிந்து போனவனை தூக்கி விடவேண்டும் ஏன் என்றால் அவன் மீண்டும் சரியாத வகையில் பல எண்ணங்களையும் செயல்களையும் செய்வான். சரிந்தவனே தற்கொலையை தேர்ந்தெடுப்பான். அவனது வாழ்க்கையின் பிரச்சினையை தீர்த்தால் அவன் இந்த உலகுக்கு முன்னோடியாவான்.
எமது சமூகத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளது. காரணம் தேடினால் ஐயோ பாவங்கள், கை கொடுத்து காப்பாற்றி அவர்களையும் வாழ வைத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம்.
கிளிநொச்சியில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் இன்று தற்கொலை.
பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது என்பதையே எல்லா மதங்களும் போதிக்கின்றன. கடவுளால் அருளப்பட்ட உயிரை மாய்த்துக்கொள்ள எவருக்கும் உரிமையுமில்லை, சட்டத்திலும் அதற்கு இடமில்லை.
ஆனால் அனைத்தும் கற்றுத் தேர்ந்தவர்களாகவே
இருந்தாலும் கூட பிரச்சினை எனும்போது எம்மில் பெரும்பாலானோர் தற்கொலையை இறுதி முடிவாகக் கொள்கின்றனர். எல்லா
பிரச்சினைகளுக்கும் தீர்வுஉண்டு. ஆனால் அது தற்கொலையாக மாற முடியாது. அதிலும் தம்மை சார்ந்தோரையும் இதற்கு பலிக்கடாவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இறுதிவரை ஒருவரது பிரச்சினை
என்னவென்பதே அவரை சார்ந்தோருக்கு
தெரியவருவதில்லை. காரணம் தம்மை சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் தான் அது. அதேபோன்று வாழ்க்கை குறித்த போதிய விழிப்புணர்வு, மனப்பக்குவம் இல்லாமையும் மற்றொரு காரணமாகும்.
பிரச்சினைகளை கண்டு எளிதில் துவண்டு விடுகிறார்கள். பிரச்சினைக்குரிய தீர்வை தேடுவதற்கு மாறாக உயிரை மாய்த்துக்கொள்ள விளைகிறார்கள். இன்னும் சிலர் வறுமை, தொழிலின்மை, குடும்பத்தில் முரண்பாடு போன்ற காரணங்களால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
உலகில் பிரச்சினை இல்லாத நபர்களே இங்கு கிடையாது. பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதைவிடுத்து தற்கொலை எனும் முடிவை தேடிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த ஒருவாரகாலமாக பதிவாகி வருகின்ற தற்கொலை சம்பவங்கள் கவலையளிக்கின்றன. மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வின்மையே இதற்கு பிரதான காரணம். வறுமை, நிதி நெருக்கடியென்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அவற்றை கடந்துவர முயற்சிக்க வேண்டும்.
மன அழுத்தம், நெருக்கடிகளுக்குள்ளானவர்களை அதிலிருந்து வெளிக் கொணர்வதற்கு சமூக ஆர்வலர்கள் உட்பட சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சகல தரப்பினரும் முன்வர வேண்டும். அதற்கு பொதுமக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. குடும்பமட்டத்திலிருந்து உளவியல் ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
இங்கு பலருக்கு பிரச்சினைகளை எதிர்த்துப் போராட தெரிவதில்லை. பிரச்சினைகளை அணுகக்கூடிய மனப்பக்குவம் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. சுகாதாரத்தரப்பினர் என்ற ரீதியில் நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
உளவியல் ரீதியில் ஏற்படக்கூடிய
பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு துரித அழைப்பு இலக்கங்கள் கூட பயன்பாட்டில் உள்ளன.
ஆனால் எம்மில் பலருக்கு இது தொடர்பில் தெளிவில்லை. யாரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் அல்லது வைத்திய ஆலோசனை தேவைப்படுமாக இருந்தால் 1925 என்ற துரித அழைப்பேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
மேலும் சுமித்ரேயோ என்ற அமைப்பு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க 0112682535 அல்லது 0112682570 ஆகிய தொலைபேசி இலக்கங்களையும் 1333 என்ற துரித இலக்கத்தையும் அறிவித்துள்ளது. அதேபோன்று 1926 என்ற தேசிய மனநல உதவி துரித அழைப்பு எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது. வெறுமனே செய்திகளை பதிவிடாமல் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த ஊடகங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.


