அவுஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் கதறக் கதற இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்!!
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முற்பட்ட வேளையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் குழு இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சொந்தமான ASY-013 விமானத்தில் பயணத்தை ஆரம்பித்த இவர்கள் இன்று (09) காலை 09.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் கடல் கடந்து அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இக்குழுவினரை வரவேற்பதற்காக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்று உயர் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திருந்தனர்.
அதாவது நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுடன் அந்த விமானத்தில் பெருமளவிலான இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளும் இலங்கைக்கு வந்திருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் குழுவை கையளித்துள்ளனர்.
தேசிய புலனாய்வு தகவல் பிரிவின் விசாரணையின் பின்னர், இந்தக் குழு கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்தக் குழுவிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

