யாழில் மீற்றர் வட்டிக்காரர்கள் தாக்கும் அதிர்ச்சிக் காணொளியில் தாக்குதலாளிகள் அடையாளம்!! 2 பேர் பொலிஸ்?
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், கடத்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவங்கள் சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் நடப்பது தெரிய வந்துள்ளது.
மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், பணத்தை குறிப்பிட்ட திகதியில் தராவிட்டால், பணம் வாங்கியவரை கடத்திச் சென்று, சித்திரவதை செய்யும் அதிர்ச்சி சம்பவங்களும் வெளியாகியுள்ளன.
நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவிய இரண்டு காணொளிகளில், ஒரே குழுவினால் இரண்டு வெவ்வேறு நபர்கள் அடித்து சித்திரவதைப்படுத்தப்படுவது பதிவாகியிருந்தது.
அவர்கள் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியிருப்பதும், குறிப்பிட்ட நாளில் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்படுவதும் காணொளி உரையாடலில் இருந்து தெரிய வருகிறது.
இரண்டு காணொளிகளிலும் பதிவாகியுள்ள குற்றவாளிகளை கண்டறியும் பணியில் பொலிசார் ஈடுபட்டு, தற்போது, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை தாக்குதல் நடாத்தியவர்களில் சிலர் பொலிசாருக்கு நெருங்கிய தொடர்பானவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. பொலிஸ் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பொலிசாரும் அந்த கொடூரக் குழுவில் அடங்கியிருப்பதாக வட்டிக்கு பணம் வாங்கி அடிவாங்கிய சிலர் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுன்னாகம் மற்றும் மயிலங்காடு பகுதியை சேர்ந்த குற்றக் கும்பல் ஒன்றே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது. காணொளியில் பதிவாகியுள்ள இரண்டு தாக்குதலாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கும்பலில் இருப்பவர்களின் பெயர்கள் காணொளியிலேயே பதிவாகியுள்ளது. ரவி, ஜெகன், பாண்டி, சிறியென இயங்கும் இந்த நபர்கள், யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதும், பணத்தை வசூலிக்க கடத்திச் சென்று சித்திரவதைப்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு துணையாக தமிழ்ப் பொலிசார் சிலரும் உடந்தை எனவும் வட்டி கொடுக்காதவர்களை அவர்களே தமது அடையாள அட்டையைக் காட்டி குறித்த நபர்களை கடத்தி வந்து அடித்து துவைப்பதாகவும் இந்த கும்பலை சேர்ந்த ஒருவரின் வீட்டினருகில் உள்ள வாழைத்தோட்டம் அல்லது மயிலங்காடு மயானத்திற்கு ஆட்களை கடத்திச் சென்று அடித்து சித்திரவதைப்படுத்தி பணத்தை வசூலித்து வந்ததாகவும் பொதுமக்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக நடக்கும் இந்த குற்றச்செயல் தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றக்கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. பொலிஸ் உயரதிகாரிகள் சிறப்பான முறையில் செயற்பட்டாலும் குறித்த ஒரு சில தமிழ் பொலிசாரால் இவ்வாறான செயற்பாடுகள் காணப்படுவதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
அத்தோடு ‘பொலிஸ் ஐயா அடிக்காதீங்க’ என்று அதில் ஒருவர் கத்துவதும் குறிப்பிடத்தக்கது.

