புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லுார் அரசடிவீதியில் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு ஆயத்தமாக இருந்த 13 காவாலிகள் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டனர்!!

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவம் ஒன்றினை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 13 பேர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் அரசடி பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று ஒன்றுகூடி நிற்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் 13 பேரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த ஒருவரும், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 06 பேரும் ஏனையவர்கள் அரசடி மற்றும் அரியாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை பொலிஸாரைக் கண்டதும் தம் வசம் இருந்த கைக்கோடாரி ஒன்றினை அருகில் இருந்த நீர் நிலையில் வீசியதாகவும், வன்முறைக் கும்பலிடம் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.