இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வெளிநாடொன்றில் எல்லையை கடக்க முற்பட்ட இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொலை!!

தமது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக உரிய அனுமதியின்றி நாட்டின் எல்லையை கடக்க முற்பட்ட இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் மோரே பகுதியில் வசித்து வந்த, மோகன் மற்றும் அய்யனார் ஆகிய இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர்.

மியான்மர் நாட்டு எல்லையை கடக்க முற்பட்டவேளையே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மியான்மரின் தாமு எனும் பகுதியை சேர்ந்த, தங்களது நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இருவரும், உரிய அனுமதியின்றி நாட்டின் எல்லையை தாண்டி சென்றுள்ளனர்.

அப்போது மியான்மரின் ஆயுதப்படைக் குழுவால் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

விசாரணையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் 28 வயதான மோகன் என்பதும், ஆட்டோ ஓட்டுநரான அவருக்கு இரு வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது எனவும் தெரிய வந்துள்ளது.

மற்றொரு நபர் 35 வயதான அய்யனார் எனும் சிறு வியாபாரி என அறியப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக இருவரும் மியான்மர் எல்லைக்குள் நுழைந்ததால், அவர்களை உளவாளிகள் என கருதி அந்நாட்டு இராணுவத்தினர் சுட்டுக் கொன்று இருக்கலாம் என மோரே தமிழ் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இருவரையும் பயங்கரவாத குழுவினர் சுட்டு கொன்றதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது,
இது தொடர்பில் விசாரணை நடக்கும் நிலையில் அதன் முடிவில் தான் முழு தகவல்களும் வெளியாகும்.

மியான்மரில் உள்ள இரண்டு தமிழர்களின் உடல்களை, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.