புதினங்களின் சங்கமம்

வித்தியா கொலையில் சுவிஸ்குமாரை தப்ப விட்ட பொலிஸ் அதிகாரிக்கு நடக்கப் போகும் கேவலம் இது!!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து
உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப
பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராகவே இந்தக் குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம்
மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதுதொடர்பான ஆவணங்களை யாழ்ப்பாணம் மேல்
நீதிமன்றுக்கு அனுப்பிவைத்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக
கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து
உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்
லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றப்
புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப பொலிஸ் பரிசோதகர்
சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று சட்ட மா அதிபரின்
நடவடிக்கைகக்காக விடப்பட்டது.
இந்த நிலையில் மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியை விடுவித்தமை மற்றும்
அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர்
சிறிகஜன், வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க
ஆகிய இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யவுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் எதிரான இந்தக் குற்றப்பத்திரிகையில் 26 சாட்சிகளையும் சட்ட மா
அதிபர் இணைத்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை
செய்யப்பட்டார். மறுநாள் அவரது சடலம் பற்றைக் காணிக்குள் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கின் சந்தேகநபர்களைப் பொலிஸாரும் பொதுமக்களும் பிடித்தனர். சுவிஸ்
குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரையும் ஊர் மக்கள் பிடித்து
பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவரை யாழ்ப்பாணம் அழைத்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன், அன்றைய தினம் இரவு
பொலிஸ் காவலிலிருந்து அவரை விடுவித்தார்.

இந்த நிலையில் மாணவி படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் (Trial at
bar) முன்னிலையில் இடம்பெற்றது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன்,
அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு
இடம்பெற்று சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனையடுத்தே சுவிஸ் குமாரை தப்பிக்கவைத்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த
பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன்
ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.