கைதான பாராளுமன்ற ஊழியரான முஸ்லீமிடம் பல கோணங்களில் விசாரணை!! வேலை கொடுத்த முஸ்லீம் அமைச்சர் யார்?
குருணாகல் – அலகொலதெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் ஆயுத பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கண்டி – அலவத்துகொட, மாவத்துபொல இலக்கம் 60 எனும் முகவரியைக் கொண்ட 42 வயதான மொஹம்மட் நெளசாட் ஜமால்தீன் என்பவரையே இவ்வாறு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நேற்று பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் குருணாகல் போதனா வைத்தியசாலையின் ஊழியர் உள்ளிட்ட மூவருடன் சேர்த்து இந்த பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரையும் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, குருணாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வசந்த கித்சிரி ஜயலத்தின் ஆலோசனையின் பிரகாரம் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேசிய தெளஹீத் ஜமாத் எனும் பயங்கரவாத அமைப்பின் இதுவரை வெளிவராத பல இரகசியங்களை வெளிப்படுத்த மேலதிக விசாரணைகளில் முடியுமாக இருக்கும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிரி ஜயலத் தெரிவித்தார்.
குருணாகல் பொலிஸார் முன்னெடுத்த நீண்ட விசாரணைகளில் ஒரு பகுதியாகவே இந்த பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வீரகேசரிக்கு தகவல் தருகையில்,
‘ குருணாகல் பொலிஸாருக்கு முன்னர் தகவல் ஒன்று கிடைத்திருந்தது. அதாவது குருணாகல் – அலகொலதெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றில் ஆயுத பயிற்சி முகாம் ஒன்று செயற்படுவதாகவே அந்த தகவல் கிடைத்திருந்தது. அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த குருணாகல் பொலிஸார் முதலில் மூவரைக் கைது செய்தனர். அதில் அந்த தென்னத்தோப்பின் உரிமையாளரும் உள்ளடங்கின்றார். ஏனைய இருவரில் ஒருவர் பயிற்சி முகாமின் இணைப்பாளராக செயற்பட்டவர். அவர் தல்கஸ்பிட்டி, அம்பகொட்ட பகுதியைச் சேர்ந்தவர். மற்றையவர் அந்த முகாமில் வளவாளராக செயற்பட்டவர். அவர் திஹாரி பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் மூவரும் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பயிற்சி முகாம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்றன. அந்த விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையின் ஊழியர். அவரும் தல்கஸ்பிட்டி, அம்பகொட்டே பகுதியைச் சேர்ந்தவர். மற்றையவர் ஹாலி எல , அம்பகொட்டே பகுதியைச் சேர்ந்தவர். அவரிடமிருந்து பல பெறுமதிகள் குறிப்பிடப்பட்டிருந்த காசோலைகள் கைப்பற்றப்பட்டன.
அவ்விருவரும் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் குருணாகல் வைத்தியசாலை ஊழியரின் வங்கிக்கணக்குக்கு பல்வேறு நபர்கள் அனுப்பி வைத்துள்ள பெரும் தொகை பணம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.
இந் நிலையிலேயே குறித்த வைத்தியசாலை ஊழியர் வழங்கிய தகவல்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி கடந்த சனிக்கிழமை நெளஷாட் ஜலால்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமையவே இந்த பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளர் கைது செய்யப்பட்டார். அவரை தடுத்து வைத்து விசாரிக்க நாம் அனுமதி பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவர் விளக்கமறியலில் உள்ளனர். ஏனைய மூவரும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.
தீவிர விசாரணை
கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரிடம் சிறப்பு பொலிஸ் குழு தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதுடன், அவர் கடமை நிமித்தம் தங்கியிருந்த இராஜகிரிய இருப்பிடம் மற்றும் அவரது அலவத்துகொட பகுதியில் உள்ள வீடு ஆகியன பொலிசாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது பொலிசாரால் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் சிலவும் ஆவணங்களும் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக அரிய முடிகின்றது.
நெளஷாட் ஜலால்தீன் கடந்த 2006 ஆம் ஆண்டு பாராளுமன்றின் ஹன்சார்ட் பிரிவின் மொழிபெயர்ப்பாளராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் சிபாரிசின் பேரில் அவருக்கு அந்த தொழில் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பிலும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இவரது கைது தொடர்பில் பாராளுமன்ற செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.