யாழ் நெல்லியடிச் சந்தியில் ஆட்டோச்சாரதிகளால் பேரூந்து நடத்துனர், சாரதி நையப்புடைப்பு!! சாரதிகள் ஆர்ப்பாட்டம்!!
நெல்லியடி சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும், நெல்லியடி முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இடையே கைகலப்பு நேற்றிரவு ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டி சாரதிகள் தலைமறைவாகியதுடன் சாரதி மற்றும் நடத்துனர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட போதே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சாரதி தெரிவிக்கையில், நடத்துனர் கடைக்கு சென்றவேளை நடத்துனர் யார் எனக் கேட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். நடத்துனர் பேருந்திற்கு அருகில் வந்ததும் நடத்துனரை 4 முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இத் தாக்குதலை தடுக்க முற்பட்ட சாரதியாகிய தன்னையும் சுமார் 8 பேர் கொண்ட குழு தாக்கியதாக இலங்கை போக்குவரத்து சபை சராதி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பேருந்து சாரதிகள் ஒன்று கூடி தாக்குல் நடாத்திய முச்சக்கர வண்டி சாரதிகளை உடன் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த நெல்லியடி பொலீஸார் நாளை குறித்த சாரதிகளை கைது செய்வதாக உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்து நெல்லியடி பகுதியில் இருந்து குறித்த பேருந்து அகற்றப்பட்டு பயணிகள் பிறிதொரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

