இலங்கை தமிழர்களை பெருமைப்படுத்திய சுவிஸ் வங்கி; தாயகத்தை தலை நிமிர வைத்த சைந்தவி கேதீஸ்வரன்!
சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களை பெருமைப்படுத்தியுள்ளது.
குறித்த அரசவங்கி தமிழர்களின் தமிழ் கலைசார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றது.
சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களின் தமிழ்க்கலைசார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தில் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள அரச வங்கி நிறுவனம் ஒன்று (Bern Kantonal Bank) இவ்வாறு தனது விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பெற்ற தமிழ்க்கலைத் தேர்வில் இசைத்துறையில் ஆற்றுகைத் தேர்வினை நிறைவுசெய்த தமிழ் மாணவியும் வளர்ந்துவரும் இளம் இசை ஆசிரியருமான இசைக்கலைமணி சைந்தவி கேதீஸ்வரன் அவர்களுடைய இசைத்துறை சார்ந்த அட்டைப்படத்தினை தங்கள் வங்கியின் இலத்திரனியல் இயந்திரத்திலும் (ATM Cash Machine) விளம்பர செயற்பாடுகளிலும் பயன்படுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
சிறுவயதில் இருந்தே தமிழ்மொழியினையும் இசைத்துறைசார்ந்த தமிழ்க்கலையினையும் முறையாகக்கற்றுவந்த செல்வி. சைந்தவி கேதீஸ்வரன் அவர்கள் பொருளியல் சார்ந்த உயர்கல்வியினையும் கற்றுவருவதுடன் மேற்குறிப்பிட்டுள்ள வங்கியில் வாடிக்கையாளர் நிதியியல் ஆலோசகராகவும் பணியாற்றிவருகின்றார்கள்.
சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழர்களின் தமிழ்கலையினை அரச வங்கி நிறுவனம் ஒன்று அடையாளப்படுத்தக்கூடியவாறு தன்னை உயர்நிலைப்படுத்திக்கொண்ட செல்வி சைந்தவி கேதீஸ்வரனுக்கு பல்லரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
.அதேவேளை தாயகத்தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் பெற்றோர்களின் நீண்டகால கடினமான உழைப்புக்களிற்கு கிடைத்த அறுவடையாக அவர்களின் பிள்ளைகள் பல துறைசார்ந்த உயர்கல்விகளுடன் தாய்மொழியினையும் தமிழ்க்கலைகளையும் கற்று துறைசார் உயர்பதவிகளிலும் பணியாற்றிவருவது புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகவாழ் தமிழர்களுக்கே பெருமையளிக்கின்றது.
மேலும் புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை சுவிட்சர்லாந்து அரசவங்கி விளம்பரத்தில் பயன் படுத்தியுள்ளமை தமிழர்களை புளகாங்கிதம் அடைய வைத்துள்ளது.


