இலங்கையில் 2,800 கர்ப்பிணிகளுக்கு கொரோனா 21 பேர் சிகிச்சை பலனின்றி மரணம்!
நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 800 கர்ப்பிணித் தாய்மார்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் குடும்பநல சுகாதாரப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளான 21 கர்ப்பிணித் தாய்மார்கள் சிகிச்சை பலனின்றி இதுவரை உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே, தொற்றுக்குள்ளான 700 கர்ப்பிணித் தாய்மார்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எந்தவொரு கொரோனாத் தடுப்பூசியையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொடர்னா, பைசர் மற்றும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளையும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றுவதற்கு மாத்திரமே பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
