புதினங்களின் சங்கமம்

மனதை நெகிழ வைத்த யாழ் நீதவானின் செயல்.

ஒரு சில நாட்களின் முன்பு யாழ்ப்பாணத்தில் (கோண்டாவில் கோயில்) ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்டான். எங்கள் ஊரைச் சேர்ந்த இந்த இளைஞன் மிகவும் நற்பண்புகள் கொண்டவன் என்று அறிந்தோம். அவர்கள் குடும்பத்தினருக்கும், எங்களுக்கும் தாங்க முடியாத வேதனை.
அன்று தற்கொலை நடந்த இடத்திற்கு யாழ் நீதவான் வந்து, தனது கடமைகளைச் செய்துள்ளார். அவரது கடமைகளைத் தாண்டி மேலும் பல செயல்களை இறந்த இளைஞனின் குடும்பத்திற்காகச் செய்துள்ளார். நாம் கேள்விப்பட்ட வரையில் தற்கொலை நடந்த இடத்திற்கு மிக விரைவில் வந்து ஆகவேண்டியதைச் செய்துள்ளார். அதுமட்டுமன்றி இறந்த இளைஞனின் குடும்பம் ஓரளவு வறுமைப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் கோயில் ஐயா உட்பட நிர்வாகத்தினர் அனைவரையும் அழைத்து “இந்த இளைஞன் இரண்டு ஆண்டுகளாக இங்கு வேலை செய்துள்ளான். ஆதலால் அவனது குடும்பத்தினருக்கு உதவி செய்யுங்கள்” எனக்கேட்டுள்ளார். அவர்கள் அமைதியாக நின்றனர். அவர்களது அமைதியைப் பார்த்த நீதவான் “இப்படி ஒரு சம்பவம் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்தாலோ, அல்லது பள்ளிவாசலில் நடந்தாலோ அவர்கள் இதைப் பொறுப்பு எடுப்பார்கள். ஆனால் சைவக்கோயில்களில் மட்டும்தான் இப்படியான பிரச்சனை நடைபெறுகின்றன என்றும் நானும் சைவம்தான்” என்று கூறியுள்ளார். கோயில் நிர்வாகத்தினரும் ஒரு இலட்சம் பணம் கொடுக்க முன்வந்தனர். அதனையும் இப்பவே எனக்கு முன்னால் கொடுக்கவும் என்றார். ஏனென்றால் நான் சென்ற பின்னர் நீங்கள் 25 000/=, 10 000/= என்று பிச்சுக் கொடுப்பீர்கள். அது ஒன்றும் வேண்டாம் இப்பவே கொடுங்கள் என்று கூறினார். மேலும் அவர்கள் கொடுத்த பணத்தை வேண்டி, அழுதுகொண்டு நின்ற இளைஞனின் சகோதரியிடம் இந்தப் பணத்தைக் கவனமாக கொண்டு செல்லுங்கள் என்றும், ஒவ்வொரு ரூபாவும் மிகப்பெறுமதிவாய்ந்தன என்றும் அதனால் பார்த்து செலவு செய்யுங்கள். தேவையில்லாத ஆடம்பரச் செலவு வேண்டாம் என்றும் அறிவுரை கூறியுள்ளார். பொதுவாக மனிதர்கள் தமது கடமையை மட்டும்தான் செய்வார்கள். ஆனால் இங்கு நீதவான் தனது கடமையுடன் மட்டும் நின்றுவிடாது மனிதாபிமானமாகவும் நடந்துள்ளார்.
மேலும் இறந்த உடலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல வாகனம் வந்தபோது, அவர்களிடம் “கொண்டு செல்ல எவ்வளவு பணம்” என்று கேட்டுள்ளார். அவர்களும் குறித்த ஒரு தொகைப்பணத்தைக் கூறினர். நீங்கள் சொல்வது அதிகமான தொகை என்றும் ஒரு நியாயமான பெறுமதியைக் கூறி அதையும் எனக்கு முன்னாலே பெற்றுங்கொள்ளுங்கள். நான் போன பின்பு அதிகமாக வாங்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளார். “மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது மணிகட்டின மாடு சொன்னால் தான் கேட்கும்” என்ற முதுமொழி தான் ஞாபகம் வருகிறது.
அத்துடன் இறந்த உடலை வைப்பதற்கும் நீங்கள் தானே பிரேதப்பெட்டி கொடுப்பீர்கள். அதுவும் என்ன விலை என்று கேட்டுள்ளார். அவர்கள் ஒரு விலையைக் கூறியுள்ளனர். அதற்கு நீதவான் “நானும் சவப்பெட்டிக் கடையில் வேலை செய்துள்ளேன். உந்த விலை சரிவராது குறையுங்கள்” என்று கேட்டுள்ளார். அதனால் விலை கொஞ்சம் குறைக்கப்பட்டது. மேலும் இறந்தவர் எப்படி வேலைக்கு வந்துபோவார் என்று கேட்டபோது, அவன் மோட்டார் வண்டியில் வந்துபோவதாகச் சொல்லியுள்ளனர். இதைக்கேட்ட நீதவான் இறந்தவரின் சகோதரனிடம் “வண்டி திறப்பை வாங்கி, இப்பவே உங்கள் வண்டியை எடுத்துச் செல்லுங்கள் என்றும், இறந்தவரின் உடுப்புப் பெட்டி, பணப்பை உட்பட எல்லாவற்றையும் கொண்டு செல்லுங்கள்” என்றும் கூறியுள்ளார். ஏனென்றால் நான் சென்ற பின்னர் இறந்தவர் ஏதாவது கடன் வைத்துள்ளார் என்று யாராவது பொய் சொல்லி இவைகளைத் தர மறுக்கலாம். அதனால் இப்பவே எடுத்துச் செல்லுங்கள் என்றாராம். இவ்வளவும் செய்த மதிப்பிற்குரிய நீதவான் அவர்களைத் தலைவணங்குகின்றோம்.
சில மனிதர்களின் மனிதாபிமானமற்ற செயல்களையும், லஞ்சம், ஊழல்களையும், ஒருபக்கசார்பாக நடப்பதையும் பார்த்த எங்களுக்கு இச்செயற்பாடுகள் மனதில் நெகிழ்வையும், நம்பிக்கையையும் தந்துள்ளன. வாழ்க நீண்டகாலம் என அன்பிற்குரிய நீதவானை வாழ்த்துகின்றோம்.
– கலைச்செல்வி மதி-