புதினங்களின் சங்கமம்

யாழ. மாவட்டத்தில் கொரோனாத் தொற்று நிலவரம் அபாயகரமாக உள்ளது! மாவட்ட அரசாங்க அதிபர்!

யாழ் மாவட்டத்தில் உள்ளோரால் தொற்று உறுதி செய்யப்படுகின்ற நிலையானது மிகவும் அபாயகரமான நிலையாக காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கொரோனாத் தொற்று நிலவரம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்குறித்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்று நிலமையை அவதானிக்கும் போது சற்று அபாய நிலையில்தான் காணப்படுகிறது.

நேற்று (பெப்-27) யாழ் சிறைச்சாலையில் கைதிகள் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் எட்டுப் பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் யாழ் மாவட்டத்தில் பொதுமக்கள் 249 பேருக்கும், சிறைச்சாலையில் 51 பேருக்குமாக மொத்தமாக 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

191 பேர் பூரண சுகமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள்.

இந்த நிலையிலே 513 குடும்பங்களைச் சேர்ந்த 987 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமைபோல் பொதுமக்களின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இருந்தபோதிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுமார் 150 பேர் மாத்திரம் பங்குபற்றி குறித்த நிகழ்வுகளை நடாத்த சுகாதாரப்பிரிவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தற்போதைய நிலையில் மிக மிக அவதானமாக இருப்பது முக்கியம். முதலில் வெளி மாவட்டத்திலிருந்து வருவோரால் மாத்திரமே தொற்று பரவுவதாக கருதப்பட்டது.

எனினும் தற்போது யாழ் மாவட்டத்தில் உள்ளோரால் தொற்று உறுதிசெய்யப்படுகின்ற நிலையானது மிகவும் அபாயகரமான நிலையாக காணப்படுகின்றது.

எனவே இந்த நிலையில் பொதுமக்கள் அலட்சிய போக்கை விடுத்து தங்களையும் தங்களுடைய குடும்பத்தையும் பாதுகாப்பதோடு சமூகத்தினையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

இந்த நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் அலட்சியமான மனப்பாங்குடன் அதனை அணுகுவதனை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே கண்டிப்பாக சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றுவதன் மூலமே யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படும் வரை மிகவும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் நாளைய தினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை நாடுபூராகவும் ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்ற இருக்கின்றார்கள் பரிட்சைக்குரிய சகல ஏற்பாடுகளும் கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன இருந்தபோதிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான விசேட நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக சங்கானை பகுதியில் ஒரு மாணவருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டதன் காரணமாக கோப்பாய் சிகிச்சைநிலையத்தில் பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையிலே கல்வி நடவடிக்கை பரீட்சை நடவடிக்கைகளை மிக பாதுகாப்பான முறையில் அவற்றை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக எழுவைதீவு பகுதியில் பரீட்சை நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் தற்போது அந்த நிலையம் ஊர்காவற்றுறை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் க பொ த சாதாரண பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் சுகாதாரப் பிரிவினர் மற்றும் கல்வித் திணைக்களத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எனவே தற்போதுள்ள நிலைமையை உணர்ந்து மாணவர்கள் தங்களை பரீட்சைக்கு தயார்படுத்தி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பரீட்சைக்கு தோற்ற வேண்டும். அத்தோடு அங்கு கடமை புரிகிற ஆசிரியர்கள் மற்றும் சுகாதார பிரிவினர்கள் அவர்களுக்குரிய வழிகாட்டல்களை முன்னெடுப்பார்கள்.

தற்போதுள்ள நிலையில் மிகவும் அவதானமாக இந்த பரீட்சையினை முடிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே சகல மாணவர்களும் இந்தப் பரிட்சையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.

அத்தோடு பொதுமக்கள் தற்போதுள்ள அபாய நிலையை கருத்தில் கொண்டு விழிப்பாக இருந்து இந்த நிலைமை கடக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்போதுள்ள இடர்கால நிலைமையிலே பொதுமக்களின் ஒத்துழைப்பின் மூலமே இந்த அபாய நிலையை கடந்து செல்ல முடியும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் கட்டமாக சுகாதார பிரிவினருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு பொதுமக்களுக்கான தடுப்பூசி இந்த வாரம் அளவில் வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தடுப்பூசி வந்து சேராத காரணமாக வழங்க முடியவில்லை. தடுப்பூசி கிடைத்தவுடன் அனைத்து மக்களுக்குமான தடுப்பூசி அடுத்தகட்டம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.