சங்கானை வைத்தியசாலை போக்குவரத்து மேலும் மோசம்! (Photos)
அவசர நோயாளர்கள் பயன்படுத்தும் சங்கானை வைத்தியசாலக்கு செல்லும் முக்கிய நான்கு வீதிகளும் படு மோசமாக சேதமடைந்து மக்கள் போக்குவரத்திற்கு உதவாமல் காணப்படுவதையும் வைத்தியசாலைக்கு அண்மையில் வாகனங்கள் வீதியில் நிறுத்தப்படுவதால் நோயாளர்கள் பயணிக்கமுடியாமை தொடர்பிலும் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்பிரச்சனை தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வலி மேற்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.இதற்கு உடனடி தீர்வு வழங்கப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.அதன் பின்னர் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
வைத்தியசாலைகக்கு அண்மையில் பாரிய கருங்கல் களஞ்சியம் அமைக்கப்பட்டு தூர இடங்களுக்கு அவை கொண்டுசெல்லப்படுவதால் இந்நிலை உருவாகியுள்ளது.
வைத்தியசாலைக்கு அண்மையில் காணப்படும் மகாதேவ பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணியில் பாரிய களஞ்சியமாக கருங்கல் சல்லி,மணல் கொட்டப்பட்டு களஞ்சியப்படுத்தப்படுகிறது. களஞ்சியத்திற்கு வைத்தியசாலைக்கு முன்பாகவே டிப்பர்களில் இரவு பகலாக பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதால் வைத்தியசாலை சூழல் புழுதி மண்டலமாக காணப்படுகிறது.

அத்துடன் ஆலயத்திற்கு அருகிலுள்ள களஞ்சியத்திலிருந்து அராலியில் நடைபெறும் வீதி வேலைக்கு டிப்பர்கள் மூலம் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதால் அயற்சூழலில் காணப்படும் வீதிகள் எல்லாம் மோசமாக பாதிக்கப்பட்டு தாழிறங்கியுள்ளன.

இதனால் வீதியால் நோயாளர்களை ஏற்றிவரும் வாகனங்களின் ரயர்கள் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகின்றார்கள். இதனையும் பெரும் கஷ்ரத்தின் மத்தியில் கடந்து நோயாளர்கள் வைத்தயிசாலை சென்றாலும் வைத்தியசாலை உப வீதியின் நடுவில் தொடர்ச்சியக நிறுத்தி வைக்கப்படும் மினிவான்கள்,லொறிகளால் மேலும் போக்குவரத்து பாதிக்கக்படுகிறது. இம் மக்கள் விரோத செயற்பாடுகள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் உறவினர்களினால்தான் மேற்கொள்ளப்படுகிறது. வைத்தியசாலைக்கு அருகில் வீதியில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டு வீதியில் வைத்து அவை கழுவப்படுகின்றன.

வைத்தியசாலைக்கு செல்லும் நான்குவீதிகளும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் ” ஐ ” றோட் திட்டத்தில் புனரமைக்கப்படவுள்ள நிலையில் கோவிலுக்கு அண்மையில் அமைக்கட்பட்ட கருங்கல் களஞ்சியம் மூலம் வைத்தியசாலயை அண்மித்த வீதிகள்தான் புனரமைக்கப்படவுள்ளது என மக்கள் நம்பியிருந்தனர். இந்நிலையில் 10 கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள அராலிக்கு இங்கிருந்து ஏன் இங்கிருந்து பொருட்கள் கொண்டுசெல்லப்படவேண்டும் இவ் வீதிகளை ஏன் சிதைக்கவேண்டும் என ஏமாற்றப்பட்ட மக்கள் கேள்வியெழுப்புகின்றன்னர்.பிரதானவீதிகளில் ஓடவேண்டிய டிப்பர்கள் எங்கேயோ நடைபெறும் வீதி வேலைகளுக்காக சிறிய வீதிகளில் ஓடித்திரிவது மக்களுக்கும் நோயாளர்களுக்கும் பாரிய சவாலாக காணப்படுகின்றது. அடிப்படை அறிவே இல்லாதவர்களால் இவ்வாறான திட்டங்களை போட முடியும் .
இங்கு களஞ்சியம்அமைக்கப்பட்டதனால் வேறு பிரதேசங்களிலுள்ள ஏனைய வீதிகளும் புனரமைக்கப்பட்டு இறுதியாகத்தான் குறித்த வீதிகள் புனரமைக்கப்படும் என நம்பகரமாக அறிய முடிகின்றது. எனவே தற்போதைக்கு இவ்வீதிகள் புனரமைக்கப்படும் சாத்தியம் இல்லையென்பதனால் களஞ்சியத்தினையாவது வேறு இடத்திற்கு மாற்றி இருக்கும் வீதிகளையாவது பாதுகாக்குமாறு நோயாளர்களும் மக்களும் கோருகின்றனர்.

