புதினங்களின் சங்கமம்

உயிர் அச்சுறுத்தல் என்றால் வீட்டில் இருங்கள் – சுமந்திரனுக்கு சரத்வீரசேகர ‘அட்வைஸ்’

சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் என்றால் வீட்டில் இருக்கவேண்டும் அதைவிடுத்து அவர் ஆயிரக்கணக்கானோர் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டியதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்தார்.

சுமந்திரனின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில், அவரது பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுமந்திரன், சில மாதங்களுக்கு முன்னர் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வெளியில் நிறுத்தி வைத்து விட்டு, இலங்கை பாதுகாப்பு படையை கொலை செய்த பயங்கரவாத அமைப்பினரை அவர் நினைவூட்டியதாகவும் குறிப்பிட்டார்.

அந்த சந்தர்ப்பத்திலேயே, தான் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை, வாபஸ் பெறுவதற்கு தீர்மானித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

அந்த சந்தர்ப்பத்தில், தான் சுமந்திரனுக்கு தொலைபேசியூடாக அழைப்பை மேற்கொண்டு, தங்களது உயிருக்கு ஆபத்து இருக்கின்றமையினால் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திரந்தேன்.

முதலாவது சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் மன்னிப்பை வழங்கியிருந்தேன்.

அதன் பின்னர், இரண்டாவது தடவையாக நீதிமன்ற உத்தரவை மீறி, பொலிஸ் உத்தரவை மீறி, சட்டவிரோதமான முறையில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியவருக்கு, சட்ட ரீதியிலான பாதுகாப்பு பிரிவிற்கு பாதுகாப்பு வழங்க முடியாது.

சுமந்திரனின் பாதுகாப்பு முழுமையாக அப்புறப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருமாக நான்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சுமந்திரனின் பாதுகாப்புக்காக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுமந்திரன் பயங்கரவாத அமைப்பினரை நினைவு கூரும் நிலைப்பாட்டில் இருக்கும் வரை, அவருக்கான பாதுகாப்பை தான் அப்புறப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.