யாழ் துன்னாலையில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!! வெள்ளம் காரணமா?? கொலையா??
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக காணப்பட்டுள்ளார்.
ஜே/ 417 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவர் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் தற்போது காணப்படுகின்றது என்று சம்பவ இடத்திலிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த ஒழுங்கைப் பகுதி நீர்நிறைந்து காணப்படுவதால் அதனை மக்கள் பாவனைக்கு குறைத்துவந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த நபர் திருமணமாகாதவர் என்றும் சகோதரியுடன் வாழ்ந்துவந்தவர் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்ட நபரின் கழுத்தில் வெட்டுக் காயம் காணப்படுவதாக திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா தெரிவித்துள்ளார்.
ஏழு இஞ்சி நீளமும் அரை இஞ்சி ஆழமும் கொண்ட காயம் கழுத்துப் பகுதியில் காணப்படுவதாக திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ள நிலையில் மரணம் கொலை என்ற சந்தேகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றது.
சடலம் தற்போது பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

