இலங்கையில் பேரவலத்தை நோக்கி கொரோனா 3வது அலை! – சிறப்புப் பார்வை!
3வது அலை கொரோனா தொற்று பரவலானது இலங்கையில் பேரவலத்தை நோக்கி நகர்வதன் அறிகுறியாக கடந்த 48 மணித்தியாலங்களில் மட்டும் சமூக மட்டத்தில் இருந்து 819 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புபட்டிருந்தவர்கள், கொரோனா அறிகுறிகள் வெளிப்படையாக தெரியவந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பபுபவர்கள் என தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலை, தற்போதைய 3வது அலையில் மாற்றமடைந்துள்ளது.
மினுவாங்கொட கொத்தணியில் கொத்து கொத்தாக தினமும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால் அவர்களுடன் தொடர்புபட்டவர்களது எண்ணிக்கையும் மிக மிக அதிகமாகவே இருந்துவருகிறது.
இவ்வாறு அதிகளவானவர்கள் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு வருவதால் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்பிவழியத் தொடங்கியது.
இதையடுத்து தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் அவரவர் வீடுகளிலோ, தொடர்புடைய அலுவலகங்களிலோ சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையேற்பட்டுள்ளது.
தற்போது இவ்வாறு அவரவர் வீடுகளில் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களில் இருந்தே அதிகளவான தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 48 மணி நேரத்தில் 819 பேர் சமூக மட்டத்தில் இருந்தே தொற்று உறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (நவ-03) 401 (மொத்த தொற்று 409) பேரும், நேற்று (நவ-04) 418 (மொத்த தொற்று – 443) பேரும் இவ்வாறு சமூக மட்டத்தில் இருந்து தொற்று உறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கட்டுள்ள பெரும்பாலானவர்கள் கொரோனாத் தொற்று தொடர்பான அச்ச நிலையேதுமின்றி சுய கட்டுப்பாட்டை மீறி சமூகத்தில் நடமாடிவருகின்றமை அவதானிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் அவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் இருந்து அதிகளவான தொற்றாளர்கள் இனம்காணப்பட்டு வருகின்றமையானது, அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்ற கட்டமானது மிகப்பாரிய எண்ணிக்கையானவர்களை தனிமைப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் நிலமை கைமீறிய நிலைக்கு செல்வதாகவே இருக்கும்.
தற்போதைய நிலை அவ்வாறான அபாயகரமான நிலைக்கு கட்டியம் கூறுவதாகவே கருதப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் அதிகூடிய ஒத்துழைப்புடன் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதும், அநாவசிய பயணங்களை தவிர்ப்பதும், ஒன்றுகூடும் விழாக்களை முற்றிலுமாக புறக்கணிப்பதும் இன்றியமையாததாகும்.
எந்நிலையேற்படினும் நாட்டை முடக்கப்போவதில்லை என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய விசேட உரையில் தெரிவித்திருக்கும் நிலையில், எமது பாதுகாப்பான வாழ்வு எமது கைகளில் என்பதை யாவரும் உணர்ந்து கட்டுப்பாட்டுடன் இருப்பது ஒன்றே இக்கொடிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.

