தடைகளுக்கு மத்தியில் தியாகி தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல் இன்று!
தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தலின் 12ஆம் நாளான இறுதி நாள் இன்றாகும். திட்டமிட்டவாறு அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்படும் என்ற அறிவிப்பால் யாழ் குடாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டத்தை இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் முன்னெடுத்திருந்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் 12 நாட்கள் நடைபெற்று செப்டெம்பர் 26 ஆம் திகதி, இன்றைய நாளில் மு.பகல் 10.48 மணிக்கு திலீபனின் உயிர்நீத்ததுடன் நிறைவுக்கு வந்திருந்தது.
12 தினங்களும் நீராகாரம் எதுவுமின்றி திலீபன் போராட்டம் நடத்தியிருந்தார். தியாக தீபத்தின் நினைவேந்தலில் அவர் உயிர்நீத்திருந்த நாளான இன்று தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களால் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படுகின்றது.
தாயகத்தில் பகிரங்கமாக நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த நீதிமன்றங்கள் தடையுத்தரவுகளைப் பிறப்பித்திருந்ததுடன் சந்நிதி ஆலய சூழலில் முன்னெடுக்க இருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் பருத்தித்துறை நீதிமன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டவாறே இன்று திடீர் ஏற்பாடாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் யாழ் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

