புதினங்களின் சங்கமம்

மன்னார் கடலில் காயங்களுடன் நீரில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்! வல்லுறவின் பின் கொலை?

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை (13) மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை சடலம் ஒன்று சந்தேகத்திற்கு இடமான நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அந்த பகுதிக்கு விரைந்து வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மதியம் மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், நீர் நிறைந்த பாத்தியில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதோடு, பெண்ணின் உடலின் பலத்த காயங்கள் காணப்படதுடன் இழுத்து செல்லப்பட்ட அடையாளங்கள், ஆண் ஒருவரி பாதணி, உட்பட சில தடயப் பொருட்களையும் சம்பவ இடத்தில் இருந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானாரா என்ற சந்தேகமும் நீடிக்கிறது. அவரது உடலில் கடித்ததை போன்ற காயங்களும் தென்படுகின்றன. சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படவில்லை.

வெளியிடத்தை சேர்ந்த பெண், அங்கு கொண்டு வந்து வீசப்பட்டாரா என்ற சந்தேகமும் உள்ளது. மீட்கப்பட்ட சடலம் சடலப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.