யாழில் யுவதிகளின் மார்பைப் பெரிதாக்குவதாக ஏமாற்றி துஸ்பிரயோக முயற்சி!! சாளினி அதிர்ச்சித் தகவல்!!
தென்னிந்திய இயக்குனர் என்ற போர்வையில் திரைப்பிரியன் என்ற பெயரில் முகப்புத்தகம் வைத்திருக்கும் தென்னிந்திய நபர் ஒருவரின் திருவிளையாடல்களை வெளிப்படுத்தியுள்ளார் சமூகநடவடிக்கைகளில் ஈடுபடுபவரும் பெண் ஊடகவியலாளருமான சாளினிசாள்ஸ். அவர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட தகவல்களை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
இந்தப் பதிவு யாரையும் புண்படுத்துவதற்காகவோ, குறை கூறுவதற்காகவோ அல்ல. சில தெளிவுபடுத்தல்களுக்காக மட்டுமே.
சினிமா நாடகம் உட்பட அரங்க செயற்பாடுகளில் நடிகர்களின் உடலில் சில மாற்றங்கள் தேவைப்படும் போது அதனை ஒப்பனை மூலமும், ஆடை அலங்கார முறைகளின் மூலமும் மிகைப்படுத்தி காட்டுவதை நாம் அறிந்திருக்கின்றோம். ஒரு சில மிக மிக குறைவான சதவீதத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களின் உடலில் ஒருசில மாற்றங்கள் தேவைப்படின் அதனை தற்காலிக மாற்றமாக சில மருத்துவ முறைகளை பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்துவதை அறிந்திருக்கின்றோம்.
அத்தோடு ஒரு சிலர் தங்களுடைய உடலில் சில மாற்றங்கள் தேவைப்படும் பட்சத்தில் தாமாக நிரந்தரமான மாற்றமாக மருத்துவ சிகிச்சை மூலம் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதையும் அறிந்திருக்கிறோம். இவ்வாறான மாற்றங்கள் மிகக் குறைவான அளவிலேயே இடம்பெறுகின்றது. அதுவும் மிகப்பெரிய திரைப்படங்களில் நடிக்கும் நிலையில், கோடிக்கணக்கில் காப்புறுதி திட்டங்களை வைத்திருப்பவர்கள் தான் இப்படியான செயற்பாடுகளை செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்க அண்மையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ( யாழ்ப்பாணத்திற்கு ) வருகை தந்த ஒரு இயக்குனர் தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட நடிகைகளுள் அதுவும் துணை நடிகைகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மார்பகங்களை பெரிதாக காட்டுவதற்காக ஒரு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து மார்பகங்களை பெரிதாக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இது அவசியமானது தானா என்பதுதான் என்னுடைய கேள்வி. குறித்த நடிகைகள் சிலர் இதனை ஒத்துக் கொள்ளாததால் தாமாகவே குறித்த படப்பிடிப்பின் வேலைகளில் இருந்து விலகியுள்ளார்.
மார்பகங்களை பெரிதாக்குவதற்கு எண்ணை கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா? அல்லது அவர்களுடைய ஒப்பனை, ஆடை வடிவமைப்பு மூலம் மார்பகங்களை பெரிதாக காட்ட முடியாதா❓
அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் அமைப்போடு இருக்கும் கலைஞர்களை தெரிவு செய்ய முடியாதா❓
இந்தியாவில் இருந்து வருகிறோம் இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கின்றோம் என்ற பெயரில் வரும் ஒரு சிலர் இங்குள்ள கலைஞர்களை பயன்படுத்த பார்க்கிறார்களா❓
இங்கிருக்கும் கலைஞர்களில் ஒரு சிலர் இந்தியாவில் இருந்து வருகிறார்கள் என்பதால் எல்லா விடயத்தையும் சிரமேற்கொண்டு செயல்படுகிறார்களா❓
இந்தியாவிலிருந்து வந்த இயக்குனர் ஒரு விடையத்தைச் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற ஒரு கண்ணோட்டம் இலங்கையில் இருக்கும் ஒருசில கலைஞர்களிடம் காணப்படுகின்றதா❓
இதனை ஏற்பாடு செய்த, கலந்து கொண்ட, சம்மந்தப்பட்ட கலைஞர்கள் இது தொடர்பாக வெளிப்படுத்தாமல் இருந்ததன் காரணம் என்ன❓
மார்பகங்களை பெரிதாக்குவதற்கு எண்ணெய் கொண்டு மசாஜ் முறையில் சிகிச்சை மேற்கொள்வது ஆபத்தானதா என்பதனை அறிந்து கொள்ள இணையத்தளங்களின் ஆய்வு செய்ததோடு ஒருசில வைத்தியரின் ஆலோசனையையும் நாடியிருந்தேன். வைத்தியர்களின் ஆலோசனைப்படி எண்ணெய் மூலம் சிகிச்சை செய்வது அவ்வளவு ஆபத்தானதாக இருக்காது என கூறி இருந்தார்கள்.
அவ்வளவு ஆபத்தானதாக இருக்காது என்று கூறினால் சிறிதளவேனும் அதில் ஆபத்து ஏற்படலாம் என்பதுதானே அர்த்தம்.
அத்தோடு அவரால் வழங்கப்படுகின்ற எண்ணெய் எத்தகையது என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. எல்லோரிடமும் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இது ஏதோ ஒரு வகையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளது. எது எவ்வாறாக இருப்பினும் உடலில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக மாற்றங்களை சிகிச்சை முறையில் செய்ய வேண்டும் என யார் கூறினாலும் ஒரு தடவைக்கு இரு தடவை அல்ல பல தடவை சிந்தித்து முடிவெடுங்கள். இது பலருடைய நலன் கருதிய விழிப்புணர்வுக்கான பதிவு மட்டுமே தவிர யாரையும் புண்படுத்துவதற்காகவோ குறை கூறுவதற்காகவோ அல்ல. இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய ஒரு விடயமல்ல . இதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது இப்போது புரியாது. ஆனால் என்றோ ஒருநாள் புரியும்.
இந்தியாவில் இருக்கும் எனக்குத் தெரிந்த திரைத்துறை சார் கலைஞர்களிடம் இவரை பற்றி விசாரித்தால் இவரை யாரென்றே தெரியாது என்ற பதில்தான் அனேகமாக வருகிறது. ஓரிரு திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து இருப்பதாக அறியக்கூடியதாக இருந்தது. இவரைப் பற்றிய பல விடயங்கள் எனக்குத் தெரிந்தும் இவருக்கு பின்புலமாக இருக்கும் ஈழத்து கலைஞர்கள் யார் என தெரிந்தும் அவற்றை நான் இதில் பதிவிடாமைக்கு காரணம் நமக்குத் தேவை விழிப்புணர்வு மட்டுமே. எது எவ்வாறாக இருப்பினும், யார் நம்மிடம் வந்தாலும், சரி பிழைகளை அறிந்து ஆராய்ந்து செயல்படக் கூடிய பக்குவத்தை நாம் பெற்றுக் கொள்வது என்பது தான் முக்கியம்.
இந்தப் பதிவை பல நாட்களுக்கு முன்பே முகப்புத்தகத்தில் போட வேண்டும் என தயார் செய்து வைத்திருந்த போதும் சிந்தித்து பதிவிடுவோம், சரியான தெளிவுபடுத்தலை பெற்றுக்கொண்ட பின்னர் பதி விடுவோம் என்ற காரணத்தினால் பதிவிடாமல் இருந்தேன். ஆனால் இதற்குப் பின்பும் பொறுமை காக்க முடியவில்லை. நிலைமை கைமீறிப் போய் விடுமோ என்ற பயம் தான் தோன்றுகிறது. அதனால் தான் இதனை பொதுவெளியில் பதிவிடுகின்றேன்.
மீண்டும் சொல்கிறேன் இது யாரையும் குறை கூறுவதற்காகவோ, புண்படுத்துவதற்காகவோ அல்ல பலருடைய நலன் கருதிய பதிவு.
ஷாலினி சாள்ஸ்


