புதினங்களின் சங்கமம்

யாழில் வயோதிபப் பெண்களைத் தாக்கி பெரும் கொள்ளை!

வட்டுக்கோட்டை சித்தண்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தியும் தாக்கியும் 25 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் காரைநகர் – யாழ்ப்பாணம் வீதியில் சித்தண்கேணியில் வயோதிபப் பெண்கள் இருவர் மட்டும் வதியும் வீடொன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்றது என்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“அதிகாலை 1.10 மணியளவில் கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர்.

ஒருவர் அவ்வாறு ஆலயத்துக்குச் சென்றார். அதன்பின்னர் மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயை துணியால் கட்டிவிட்டு வீட்டை சல்லடை போட்டு கொள்ளைக் கும்பல் தேடுதலை மேற்கொண்டுள்ளது.

அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுவிட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கி கொள்ளையர்கள்கள் கேட்டுள்ளனர்.

கொள்ளையர்களுக்குப் பயந்து போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் பெண் எடுத்துக் கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.