புதினங்களின் சங்கமம்

யாழ் ஊடகஅமைய பொறுப்பாளர் மீது தாக்குதலா? படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் விபத்தில் படுகாயமடைந்த நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை மோதிய வாகனம்
தப்பித்துவிட்டது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

புலம்பெயர் சமுகத்துடன் இன்று முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில்
பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்தச்
சம்பவம் இடம்பெற்றது. எனினும் ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் எடுக்கப்படாத்தால் விபத்தா
தாக்குதலா? என்று கூற முடியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அண்மையில் இன்று முற்பகல் இடம்பெற்றது என்று
பொலிஸார் கூறினர்.

“வடமராட்சியிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு மூத்த ஊடகவியலாளர் இ.தயாபரன் தனது மோட்டார்
சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, பின் பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை
மோதிவிட்டுத் தப்பித்தது என்று சம்பவ இடத்தில் நின்றவர்களால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் தலையில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அச்சுவேலி வைத்தியசாலையில்
சேர்ப்பித்தனர்.எனினும் மேலதிக சிகிச்சைக்காக ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூத்த ஊடகவியலாளர் இ.தயாபரன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வருகிறார்.