புதினங்களின் சங்கமம்

இந்தியாவிலிருந்து வடக்குக்குள் நுழையும் கொரோனா நோயாளிகள்! உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை!!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் வரும் நபர்கள் தொடர்பில் உடனடியாக தகவல் தருமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் கொரோனா தொற்றின் பரம்பல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மத்தியிலேயே புதிய நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இதேவேளை இந்தியாவில் தற்பொழுது கொரோனா நோயின் பரம்பல் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்நோய் காரணமான இறப்புக்களும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப்படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

அவ்வாறு எமது நாட்டிற்குள் வருகை தருபவர்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் எமது நாட்டில் இந்நோய் பரவுவதை தடுக்கக்;கூடியதாக இருக்கும்.

எனவே, இவ்வாறு யாராவது இரகசியமான முறையில் இந்தியாவிலிருந்து உங்கள் பிரதேசத்திற்கு புதிதாக வருகை தந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக உங்கள் பிரதேசத்திற்குரிய கிராம சேவையாளர், சுகாதார வைத்திய அதிகாhரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறியத்தரவும். அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் 24 மணிநேர அவசர அழைப்பெண் 021 222 6666 என்ற இலக்கத்திற்கு அறியத்தரவும்.