புதினங்களின் சங்கமம்

அரச, பொது,தனியார் அலுவலக நேரங்கள் விரைவில் மாற்றப்படவுள்ளன!!

பயணிகள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கு பொது மற்றும் தனியார் அலுவலக நேரங்களில் திருத்தங்களை பரிந்துரைக்க குழு ஒன்றை நியமிக்க போக்குவரத்து சேவைகள் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெற்ற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் தலைவராக போக்குவரத்து சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளரை நியமிக்கவும் தீர்மானிக்கபக்பட்டுள்ளது.

இந்த குழுவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே திணைக்களம் மற்றும் மாகாண பயணிகள் போக்குவரத்து அமைச்சின் பிரதிநிதிகள் நியமித்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குழு ஒரு வார காலத்திற்குள் அலுவலக நேரங்களைத் திருத்துவது குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளதுடன் அது மேலதிக பரிசீலனைக்காக பொது நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும் அலுவலக நேரங்களிலும் பாடசாலைகள் மீள ஆரம்பித்தவுடனும் நகரங்களில் நிலவும் வாகன நெறிசல் அதிகம் என்பதோடு இதன் தாக்கம் ரயில் சேவைகளிலும் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஜூன் 29 ஆம் திகதி 4 கட்டங்களாக பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.