பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகரால் சர்ச்சை!! வைத்தியர்கள் போராட ஆயத்தம்!!
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் மத்திய அரசாங்க உத்தரவுக்கமைய ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு வசதியாக விசாரணைகளில் அவரது தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் உடனடியாகப் பொறுப்புக்களைப் பதில் வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்து யாழ்.பிராந்திய சுகாதார பணிமனையில் இணையுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் இன்று(14) பணிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் இன்று மாலை வரை பொறுப்புக்களைக் கையளிக்காமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், அவர் ஆவணங்களையும், சாட்சிகளையும் திரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரோ? என்ற பலமான சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளதாக பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை(15) காலை-08.30 மணிக்கு முன்பாகப் பதில் பணிப்பாளர் தனது பதவியைப் பொறுப்பேற்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையொன்றில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததொன்றாகி விடுமெனவும் மேற்படி சங்கம் எச்சரித்துள்ளது.

