புதினங்களின் சங்கமம்

மானிப்பாயில் ஆவா குழுக் காவாலிகள் மீண்டும் அட்டகாசம்!!

மானிப்பாயில் முன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய் நகருக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலும் இடம்பெற்றது எனவும் பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 9 பேர் கொண்ட வன்முறைக் கும்பலே இந்தத் தாக்குதலை முன்னெடுத்தனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸ் தெரிவித்தனர்.

மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் அண்மையில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது தடவடையும் அங்கு புகுந்து பெறுமதியான பொருள்களைத் தாக்கி உடைத்துவிட்டுக் கும்பல் தப்பித்தது.

அந்தவீட்டுக்கு அயலிலுள்ள வீட்டுக்குள் புகுந்த கும்பல் அங்கும் அடாவடியில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தத்து. அத்துடன், மானிப்பாய் கொமர்ஷியல் வங்கிக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதலை நடத்தியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.