FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளியின் பரபரப்பு வாக்குமூலம்!! (Photos)

23.02.2020 அன்று பி.ப . 5 மணியளவில் எனக்கு சிறிது நெஞ்சு வலி ஏற்பட்டது . கூடவே இடது கையும் உளைந்தது. இரத்த அழுத்த கருவியை கொண்டு இரத்த அழுத்தத்தை பார்த்தேன் .முதலில் 166/112 உம் பிறகு 230/170௭ன கூடிக்கொண்டு
போக . கூடவே வியர்க்கவும் ஆரம்பித்தது. இதை சிலாபத்தில் இருக்கும் மூன்றாவது மகனுக்கு குறுந்தகவலில் அனுப்பினேன். உடனடியாக யாழ். வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கூறினார். கூடவே மருமகளுக்கும் தகவல் அனுப்பி நேரம் தாமதிக்காது அனுமதிக்குமாறு கூறினார் . குறிப்பாக நடக்கவே கூடாது என்றார் . இரண்டாவது மகன் கூடவே இருந்தார். மூவரும் ஆட்டோவில்
வைத்தியசாலைக்குச் .சென்றோம். நெஞ்சு வலி, வியர்வை , கை உளைவு எல்லாம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவிற்கு தூக்கிச் செல்லப்பட்டேன். நோவு தங்க முடியவில்லை என்று கூறினேன். உடனடியாக மருந்து ஏற்றினார்கள் ECG எடுத்தார்கள். சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக அவசர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்து வைத்தியம் செய்தார்கள் .இப்போ நோவு குறைம்து விட்டது .
உடனடியாகவே என்னை cardiology வாட்டிற்கு மாற்ற ஏற்பாடுகள் செய்தார்கள் . நோவு குறைந்ததால் இப்போது தான் சுற்றும் முற்றும் பார்த்தேன் . அன்மையில் புதிதாக திறக்கப்பட்ட அந்த அவசர சிகிச்சைப்பிரிவு மிக அழகாகவும் நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒரு ஐரோப்பிய நாடொன்றின் மருத்துவ மனை போல் காட்சியளித்தது. வைத்தியர்கள், தாதிமார்கள் ,உதவியாளர்கள் எல்லோரும் மிக அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்துகொண்டார்கள். ஆச்சரியமாக இருந்தது. கட்டிடங்களும், உபகரணங்களும் மட்டுமல்ல ஊழியர்களின் மனங்களும் புதிதாக சலவை செய்யப்பட்டிருந்தன. என்னிடம் மட்டுமா அல்லது ஏனையவர்களிடம் இதேமாதிரித்தான் பழகுகிறார்களா என்பதையும் அவதானித்தேன். வேறுபாடுகள் தெரியவில்லை.

இதய சிகிச்சைப் பிரிவு

இதய சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டுசெல்லப்பட்ட எனக்கு அவசியமான கருவிகள் பொருத்தப்பட்டது. இதற்கிடையில் எனது மூன்றாவது மகனும் சிலாபத்திலிருந்து வந்துவிட்டார். நான் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டேன். மீண்டும் மீண்டும் ECG எடுத்தார்கள். இரத்தம் சோதிக்கப்பட்டது . காலையில் டாக்டர் லக்ஸ்மன் வந்து பார்த்தார். நடந்த விபரங்களை கேட்டறிந்தார். ECG யில் பெரிய பிச்சனை இல்லை . ‘ஒருக்கா Echo செய்து பார்ப்போம்’ என்றார் . அவரே Echography செய்தார். பெரிதாக ஒன்றும் இல்லை போல் இருக்கிறது. நெஞ்சு நோவு இருக்கிறதா என்று கேட்டார் . இல்லை என்றேன். இரண்டு நாட்கள் இருந்து மருந்து எடுத்தால் சரிவரும் என்றார். எதற்கும் Toponin டெஸ்ட் செய்து பார்த்தபின் முடிவு செய்வோம் என்றார் .
Toponin லெவல் 25.5 positive என முடிவு வந்தது. அன்று பின்னேரம் டாக்டர் குருபரன் வந்து பார்த்தார் . உங்களுக்கு ஒரு கணிசமான அளவு மாரடைப்பு வந்து போயுள்ளது. மிக கவனமாக இருக்க வேண்டும். நடக்க கூடாது. ஆஞ்சியோகிராம் செய்து பாப்போம். இன்றும் நாளையும் மட்டக்களப்பு, திருகோணமலை நோயாளர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டது . இருபத்தி எட்டாம் திகதி செய்வோம் . அப்போதுதான் நரம்பு அடைப்புகள் எவ்வளவு வீதம் என்பது தெரியும் என்றார். நடந்து திரிய கூடாது என்று சொன்னதினால் வாட்டில் நடப்பவைகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

இருபத்தி எட்டாம் திகதி காலை ஒன்பது மணிக்கு அஞ்சியோகிராம் செய்யப்பட்டது . அஞ்சியோகிராம் செய்யப்படும் அறை புதியதாகவும் நவீன தொழில்நுட்ப மருத்துவ கருவிகளுடன் காணப்பட்டது . இளம் வைத்தியர்கள் ஆண்களும் பெண்களும் சந்தோசமாக இனிமையான பாடல்களை கேட்டபடி தங்களுக்குரிய வேலைகளில் கவனத்துடன் ஈடுபட்டனர். எனது வலது கை நரம்பிற்கூடாக முதலில் நிறமூட்டும் மருந்து செலுத்தப்பட்டது. என்னுடன் உரையாடிய படியே வேலை செய்தனர். விளக்கமும் அளித்தனர். பத்து நிமிடங்களுக்குப் பிறகு Dr. லக்ஸ்மன் “உங்கள் இதயத்திற்கு போகும் பிரதான நரம்பு 95 .5 % மும் மற்றொரு கிளை நரம்பு 99% மும் மேலும் ஒரு நரம்பு 60% மும் அடைப்புகள் இருக்கின்றன . இப்போதே இதை சரிசெய்ய stent மற்றும் baloon வைக்கப்போகிறோம். முடிந்தவுடன் உங்களுக்கு கம்ப்யூட்டர் திரையில் காட்டுவோம்” என்றார். சுமார் இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்களில் stent மற்றும் baloon என்பவைகள் வைக்கப் பட்டு விட்டன.’எல்லாம் நல்ல படியாக
செய்யப்பட்டு விட்டன’ எனக் கூறி திரையில் காட்டினார். விளக்கமும் அளித்தார்.

No photo description available.

மீண்டும் வார்டிற்கு கொண்டுவரப்பட்டேன் . பின்னேரம் Dr. குருபரன் வாட்டிற்கு வந்தார் . ‘இனிப் பிரச்சனை பெரிதாக இல்லை. மீண்டும் ஒருமுறை echography செய்து பார்த்து விட்டு நாளை வீட்டுக்குப் போகலாம். மருந்துகள் தருவோம் . ஒழுங்காக போடவேண்டும் என்றார். நேற்று வீடு திருப்பினேன். இந்தக் கவனிப்பு எனக்கு மட்டும் பிரத்தியோகமானது அல்ல . ஒவ்வொரு நோயாளரும் இவ்வாறுதான் கவனிக்கப் படுகின்றனர்.

ஒரு உண்மையை பகிரங்கமாக கூறவேண்டும் . எமது நாட்டின் மருத்துவ தரம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானது . சிலவேளைகளில் அவர்களின் தரத்தைவிட மேன்மையானது. குறிப்பாக விரைவாக முடிவெடுத்து உயிரை காப்பாற்றுவதில் எமது வைத்தியர்களின் தரம் அதிகம். அண்மையில் இதய மருத்துவம் தொடர்பான சர்வதேச பயிற்சி நிகழ்வொன்றில் எமது இதய நோய் மருத்துவ துறை விதந்து பாரட்டப்பட்டதாக அறிந்தேன். அதை நேரில் அனுபவித்தேன் .

எனது மகன்களில் ஒருவன், அவனும் மருத்துவன்தான் தனது முகநூல் குறிப்பில் ஒரு வசனத்தை மட்டும் எழுதியிருந்தான். “கடவுள் இருக்கிறாரா? ஆம் ! இருக்கிறார் . யாழ். சத்திய சிகிச்சை பிரிவில் லக்ஸ்மன் சேர் ,குருபரன் சேர்
என்ற பெயரில் இருக்கிறார்கள்.” உண்மையான சொல். இது அவனது இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள். நான் வார்டில் இருந்தபோது கவனித்தவைகளை கூறுகிறேன் . ஒரு நாளைக்கு பத்து தொடக்கம் பதினைந்து
வரையிலான நோயாளர்களுக்கு காலை எட்டு மணி தொடக்கம் பிற்பகல் இரண்டு மணி வரை அஞ்சியோகிராம் நடக்கும் . Dr. லக்ஸ்மனும் Dr. குருபரனும் செய்வார்கள் . சில வேளைகளில் இதற்கு அதிகமாகவும் நடக்கும் . இதற்கிடையில் அவசர நோயாளர்களையும் பார்ப்பார்கள். இதோடு Echography scanning உம் செய்வார்கள். பிறகு வார்ட் ரவுண்ட் . இவர்கள் வீட்டுக்கு செல்வதில்லையா? இவர்களுடைய செயல்களை சேவை என்பதா? அர்ப்பணிப்பு என்பதா? தியாகம் என்பதா? தெரியவில்லை.
கல்வியும் மருத்துவமும் வியாபாரமாக மாறிவிட்ட நவ பொருளாதார உலகில் இவர்கள் வேறுபட்டவர்கள் .ஆமை ஆயிரம் முட்டையிடிட்டு அமைதியாகப் போய்விடும் .கோழி ஒரு முட்டை இட்டு ஊரையே கூட்டிவிடுமாம். இவர்கள் ஆமையை போன்றவர்கள் . தினசரி பதினைந்து உயிர்களுக்கு வாழ்வு தருகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல இவரைபோன்ற பல வைத்தியர்கள் எமது யாழ் வைத்தியசாலையில் பணிபுரிகிறார்கள். இவர்களால்தான் பலர் உயிர் வாழ்கிறார்கள். யாழ். இதய சிகிச்சைபிரிவு யாழ் மக்களுக்கு மட்டும் சேவை செய்யவில்லை. மன்னர், மட்டக்களப்பு, அனுராதபுரம் . வவுனியா , திருகோணமலை போன்ற இடங்களில் இருந்து நோயாளர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் . இன மத பேதமின்றி முஸ்லிம் சிங்கள நோயாளர்கள் வருகிறார்கள் . சிங்கள தாதிமார்கள் நன்றாக தமிழில் உரையாடி சந்தோசமாக வேலை செய்கிறார்கள். இலவச கல்வியும் இலவச மருத்துவமும் எமது நாட்டின் இரு கண்கள் . போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை . எமது யாழ் மருத்துவ மனை மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. விசேட மருத்துவ சிகிச்சை பிரிவுகளில் மருந்துகளும் உபகரணங்களும் நிறைவாக உள்ளன .
இதற்கு முதலில் அரசுக்கும் தொடர்ந்து மருத்துவ மனை பணிப்பாளர் Dr. சத்தியமூர்த்திக்கும் எல்லா ஊழியர்களுக்கும் நன்றி கூறவேண்டும்.

இ.கிருஷ்ணகுமார்
1st மார்ச் 20

Image may contain: one or more people