புதினங்களின் சங்கமம்

யாழில் ரியுசனுக்கு செல்லாமல் கிறிக்கட் விளையாடிய சிறுவன் நடாத்திய திருவிளையாடல்!!

கல்வி நிலையத்திற்கு செல்லாமல் கிரிக்கட் விளையாடச் சென்ற சிறுவன் ஒருவன் தன்னைக் கடத்தியதாக நாடகமாடிய சம்பவம் வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை (03) நெல்லியடி மாலுசந்திப் பகுதியைச் சேர்ந்த எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் பிற்பகல் 3.00 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் அன்று மாலை தொண்டைமாணாறு பகுதியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் காரில் தன்னை கடத்தி வந்து விட்டுவிட்டு சென்றுள்ளதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு சென்ற பெற்றோர் சிறுவனை அழைத்து வந்து நெல்லியடி பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டனர்.

முறைப்பாட்டில் சந்தேகம் கொண்ட பொலிஸார் தந்தையை தடுத்து வைத்ததுடன் சிறுவனிடம் விசாரணைகளை மேற்கொண்ட போதே கல்வி நிலையம் செல்லாது கிரிக்கட் விளையாட சென்றதை மறைக்க கடத்தல் நாடகம் ஆடியதாக சிறுவன் கூறியதாக தெரிவித்த நெல்லியடி பொலிசார் இரவு 9.00 மணியளவில் தொண்டைமாணாறு பாலத்தில் சிறுவனால் மறைத்து விடப்பட்ட துவிச்சக்கர வண்டி மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடத்தல் தொடர்பில் தகவல் பரவியதும் வடமராட்சி பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்ட போதும் சம்பவம் தொடர்பில் பொலிசார் உண்மையை வெளிக் கொண்டு வந்ததை அடுத்து பதற்றம் தணிந்தது.