புங்குடுதீவில் மக்களின் காணியை அபகரித்து பாரிய கடற்படை முகாம் அமைக்க ஆயத்தம்!! மக்களைப் போராட அழைப்பு!!
புங்குடுதீவில் 14 ஏக்கரில் கடற்படை முகாம் அமைப்பதற்கு தனியாரின் காணிகளைச் சுவீகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தீவக உறவுகள் அனைவருக்கும் கவனமெடுக்குமாறு தமிழ் அரசுக் கட்சியின் தீவகக் கிளை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் தீவகக் கிளை அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.
புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன.
14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உரிமையாளர்களின் விபரம்:
- குமாரவேலு பொன்னம்மா
- சின்னத்தம்பி இராசேந்திரன்
- சுப்பிரமணியம் மகேஸ்வரி
- அண்ணாமலை கங்காசபை
- ஐயம்பிள்ளை பாக்கியம்
- வேலாயுதபிள்ளை செல்லம்மா
- கந்தையா தியாகராசா
- இராசையா கோணேசலிங்கம்
- பஞ்சாசரம் தயாபரன
- செல்வராசு அம்பிகா
கடந்த மூன்று வருடங்களாக மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமின் பொறுப்பாளர்களாக கடமையாற்றியவர்களும் இந்தக் காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயிலையும் உள்ளடக்கி ஆக்கிரமிப்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்திருந்தனர்.
எனினும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி ( தீவகம் ) கிளையினர் மேற்கொண்டிருந்த பலதரப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருந்தன .
இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் ஒரு வாரங்களுக்குள் ( நவம்பர் 22ஆம் திகதி ) வேலணை பிரதேச செயலகத்தினர் ஊடாக இவ்வாறான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது . ஆனாலும் நாங்களே தற்போதுதான் அறிந்துள்ளோம் .

