அவதானம்!! வவுனியாவில் 25 பேருக்கு எயிட்ஸ்!! வைத்தியர் அதிர்ச்சித் தகவல்!!
வவுனியாவில் கடந்த 16 வருடங்களில் 25பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.
எயிட்ஸ் நோய் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களிற்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் கூறுகையில், “உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் முதலாம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவினரால் எயிட்ஸ் தினம் நினைவு கூரப்படுகிறது.
“சமூகங்கள் நிலைமையை மாற்றலாம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது.
இலங்கையில் இதுவரை 3,507 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2,391 ஆண்களும், 1,116 பெண்களும் காணப்படுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 25 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு நோயாளி இனம் காணப்பட்டுள்ளார். அவர்களில் 12பேர் மாத்திரமே உயிருடன் இருக்கின்றனர். அவர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டு வருகிறது.
வவுனியாவை பொறுத்தவரை இங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக விபசாரம் காணப்படுகின்றது. வேறு மாவட்டங்களில் இருந்தும் விபசார தொழிலாளர்கள் இங்கு வருகை தருகின்றனர். எனவே எயிட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு தெளிவுபடுத்தல்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்களாக அனுமதிக்கப்படும் சிலருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தாமாகவும் சிலர் வருகைதந்து பரிசோதனையை மேற்கொள்கின்றனர்.
எனவே வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவே வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.

