வடக்கு அதிகாரியை பச்சைத் துாசணத்தில் ஏசிய மன்னார் நகரசபை முதல்வரின் பதவி பறிக்கப்படவுள்ளது?
ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை முறைகேடுகள் தொடர்பாக விசேட விசாரணை:
வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு!
மன்னார் நகர சபையின் பல்வேறு முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் தவிசாளரின் தன்னிச்சையான செயல்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. கந்தையா அரியநாயகம் அவர்கள் தலைமையிலான தனிநபர் விசாரணை சபை நியமிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விசாரணைப் புள்ளிகள்:
ஆவணங்களை பரிசோதிக்க மறுப்பு:
மன்னார் பொது விளையாட்டு மைதான மதில் அகற்றப்பட்டமை மற்றும் வாய்க்கால் வேலைகள் தொடர்பான கோவைகளை பரிசோதிக்க வந்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வு உத்தியோகத்தரை, தவிசாளர் ஆவணங்களை பார்க்க அனுமதிக்காது சபையிலிருந்து வெளியேற்றியமை.
கணக்காய்வு அறிக்கை கிழிப்பு:
தேசிய கணக்காய்வு அலுவலகம் வழங்கிய அவதானிப்புகளுக்குப் பதிலளிக்காமல், தவிசாளரால் அந்த அறிக்கை கிழிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமை.
சட்டவிரோத குத்தகை:
மன்னார் நகர சபைக்கு சொந்தமில்லாத ‘மூர் வீதி மாட்டிறைச்சி கடைக்கு’ பகிரங்க கேள்வி கோரியமை.
விதிமுறைகளை மீறிய கூட்டங்கள்:
கூட்ட நடப்பெண் (Quorum) இல்லாமலும், தவிசாளர் சமூகமளிக்காத நிலையிலும் சட்டவிரோதமாக சபைக்கூட்டங்களை நடத்தியதோடு, தவிசாளர் அதில் கையொப்பமிட்டுள்ளமை.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கொடுப்பனவுகள்:
நிதி மற்றும் தாபன விதிமுறைகளுக்கு முரணாக பெறுகைக்குழு, செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோருக்கு விடுமுறை மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க தீர்மானம் நிறைவேற்றியமை.
உதவி ஆணையாளருக்கு இடையூறு:
மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் கடமைகளுக்குத் தடை ஏற்படுத்தியதோடு, தவிசாளருக்கும் அவருக்கும் இடையே நீடித்து வரும் கடுமையான முரண்பாடுகள் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகள்.
உறுப்பினர்களின் ஒழுங்கீனம்:
சபை நடவடிக்கைகளுக்குக் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இரு சபை உறுப்பினர்களின் செயல்பாடுகள்.
காலக்கெடு: இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து, இன்னும் 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணை சபைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

