வவுனியாவில் பொலிஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய காவாலி துரத்திப் பிடிக்கப்பட்ட காட்சி!!
பொலிஸ் பிடியில் இருந்து தப்பியோடி பற்றைக்குள் ஒளிந்திருந்த நபர் மீண்டும் கைது!
வவுனியா குழுமாட்டுச்சந்தியில் போக்குவரத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட நபர் ஒருவர், பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பியோடி, பின்னர் நீண்ட நேர தேடுதலின் பின் பற்றை ஒன்றிற்குள் ஒளிந்திருந்த நிலையில் மீளக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடமையில் ஈடுபட்டிருந்த நெளுக்குளம் பகுதி போக்குவரத்து பொலிஸார், நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரை போக்குவரத்து பொலிஸார் தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி நெளுக்குளம் பொலிஸ் நிலைய நோக்கி அழைத்து வந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் குழுமாட்டுச்சந்தி பகுதியை கடக்க முற்பட்ட சமயத்தில், அந்த நபர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார், தப்பியோடிய நபரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் முயற்சியின் பலனாக, பராமரிப்பற்ற நிலையில் கைவிடப்பட்டுக் காணப்பட்ட காணி ஒன்றின் பற்றைக்குள் அந்த நபர் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு விரைந்த பொலிஸார், மறைந்திருந்த நபரை வளைத்துப் பிடித்து மீண்டும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

