புலம்பெயர் தமிழர்களே!! அவதானம்!! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மோசடி எச்சரிக்கை:
புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமான பயணங்களை மேற்கொள்ள அதிகளவானோர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் காரணமாகத் தமிழர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தற்போது அதிகரித்து வரும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஸ்ரீலங்கன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
-
மோசடி முறை: விமான சேவை ஊழியர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நேரடி தொலைபேசி அழைப்புகளை மோசடிக்காரர்கள் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
-
ஆபத்தான கோரிக்கைகள்: பல்வேறு கையடக்கத் தொலைபேசி செயலிகளை நிறுவுமாறும், தொலைபேசி திரையைப் பகிருமாறும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் (OTP), வங்கி கணக்கு விவரங்கள், கடன் அட்டை விவரங்கள் அல்லது ஏனைய முக்கியமான நிதி தகவல்களைத் தருமாறு இவர்கள் வற்புறுத்துகின்றனர்.
-
நிறுவனத்தின் விளக்கம்: தமது நிறுவனம் ஒருபோதும் விமான டிக்கெட்டுகளை விநியோகிப்பதற்கோ, ஊக்குவிப்புத் திட்டங்களுக்கோ அல்லது வேறு எந்தவொரு தேவைக்காகவோ வாடிக்கையாளர்களைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு இவ்வாறான தனிப்பட்ட தகவல்களைக் கோருவதில்லை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான போலியான அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

