யாழில் வாகனத்தை பின் பக்கமாக செலுத்திய போது மிதியுண்டு ஒருவர் பலி!! சாரதி சரண்!! சடலம் யாருடையது?
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து 65-70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து ஒருவர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு மேற்குறித்த பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த மரணத்துடன் தொடர்புடையவர் என்ற வகையில், சந்தேக நபர் ஒருவர் தெல்லிப்பளை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தில், பட்டா ரக வாகனத்தை நேற்றிரவு பின்பக்கமாக செலுத்தியபோது குறித்த முதியவர் தனது வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த முதியவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவே குறித்த சடலத்தை இனங்காண உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

