பல்சுவை செய்திகள்

இலங்கைச் சிறையை உடைத்து தப்ப முயன்ற கைதிகளின் காணொளிக் காட்சிகள் வெளியாகின (இணைப்பு)

இலங்கையில் கம்பஹா மாவட்டத்திலுள்ள மகர சிறையில் தப்பிச் செல்வதற்காக சிறையை உடைத்த 07 கைதிகளின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை தப்பிக்க முயன்ற 38 வயதுடைய கைதி ஒருவர் சுவரில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இரவு ஏழு கைதிகள் இரண்டு சிறை அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதன்போது சிறைச்சாலை சுவருக்கு மேல் கயிற்றைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்ற 38 வயது கைதிகளில் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். குறித்த கைதி றாகாம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 02 சிறைக் காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் றாகாம மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.