புதினங்களின் சங்கமம்

பிரான்சில் இலங்கைத் தமிழ்ப் பெண் தனது பிள்ளைகளுக்கு கரப்பான் பூச்சி சாப்பிடக் கொடுத்து கொடூர சித்திரவதை!!

பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக பிரான்சில் வசிக்கும் 46 வயதுடைய இலங்கைத்
தமிழ்ப் பெண் ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று 18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
வழங்கியுள்ளது.

பரிசின் புறநகர்ப் பகுதியான திறாப் என்ற இடத்தில் வசிக்கும் இந்தப் பெண் 14 வயதிலிருந்து
9 வயது வரையிலான தனது 4 பிள்ளைகளையும் கடந்த 6 வருடங்களாக கொடூரமாகத்
துன்புறுத்தியதாக ஆண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய
காவல்துறையினருக்கு அதிர்ச்சியழிக்க கூடிய தகவல்கள் கிடைத்ததாக பெரும்பாலான பிரெஞ்சு
ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தப் பெண், தற்போது 14 வயதாகும் தனது மூத்த மகளை அவரது 8வது வயதிலிருந்து
தொடர்ச்சியாகத் துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரண்டி மற்றும் பெல்ட்டால்
அடித்தது, லைட்டரால் சூடு வைத்தது, தனது அனுமதியின்றி வெளியே வரக் கூடாது என்று
அறையில் அடைத்து வைத்தது, சாப்பாடு கொடுக்க மறுத்தது, வீட்டில் பெருகியிருக்கும்
கரப்பான் பூச்சிகளையும் சிலந்திகளையும் சாப்பிடும்படி நிர்ப்பந்தித்தது, வீட்டு வேலைகள்
அனைத்தையும் செய்யும்படி கட்டாயப்படுத்தியது, குளிக்க அனுமதி மறுத்தது என்று
தொடர்ச்சியாக கொடுமைப் படுத்தியதாக காவல்துறையினரின் விசாரணையில் ஏனைய மூன்று
குழந்தைகளும் தெரிவித்திருக்கிறார்கள்.

தங்களை தங்கள் தாயார் அடித்துக் கொடுமைப்படுத்துவதாக அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.

தாயின் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு உள்ளான அந்த பெண் குழந்தை வயதுக்குரிய வளர்ச்சி
இல்லாமல் 7 வயது முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்குரிய வளர்ச்சியுடன் இருந்ததைப் பார்க்கக்
கூடியதாக இருந்தாக லு பரிசியன் பத்திரிகையின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இந்தக் குழந்தைகளைத் தாயிடமிருந்து மீட்ட காவல்துறையினர் அந்த
பிராந்திய சமூக சேவைகள் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளர். அந்தக் குழந்தைகளை மனநல
மருத்துவர் பார்வையிட்ட போது, ‘தங்கள் தாய் தங்களைக் கொடுமைப்படுத்திய போதும் தங்களுக்கு
அவரை விட்டால் யாரும் இல்லை’ என்றும் ‘தாங்கள் அவருடன் செல்லவிரும்புவதாகவும்’ மூத்த
பிள்ளையைத் தவிர ஏனைய இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் கூறியுள்ளனர்.

இந்தப்பிள்ளைகளின் தந்தை, 6 வருடங்களுக்கு முன்னர் தனது மூத்த பெண் பிள்ளையுடன் பாலியல்
ரீதியாகத் தவறாக நடக்க முற்பட்டதாக அவரது மனைவி அதாவது இவர்களின் தாய் காவல்துறையில்
கொடுத்த முறைப்பாட்டை அடுத்து இவர்களைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் அதன் பின்பே
இந்தப் பிள்ளைகளுக்கு கொடுமைகள் இடம்பெற்றதாகவும் லு பரிசியன் பத்திரிகை தெரிவித்துள்ளது

இது தொடர்பாக வேர் சாய் குற்றவியல் நீதிமன்றத்தில் திறாப் (பரிசின் புறநகர்ப் பகுதி) நகர
காவல்துறையினர் தொடர்ந்த வழக்கு கடந்த 16.10.2019 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது தான் தவறு செய்து விட்டதாக 46 வயதுடைய அந்த தாய் நீதிபதியிடம்
ஒப்புக்கொண்டார். ‘தன்னுடைய மூத்த மகள் தன்னுடைய சொல்லைக் கேட்பதில்லை’ என்றும் அவரை பணிய
வைப்பதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச வழக்கு தொடுனர், இந்தப் பெண்ணுக்கு 2 வருடம் கட்டாய சிறைத் தண்டனையும் 2 வருடங்கள்
ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையுமாக 4 வருட சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று
நீதிபதியிடம் கோரியிருந்தார்.
ஆனால் இந்தப் பெண் ஏற்கனவே குற்றம் எதுவும் செய்யாததால்அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத
சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.