பருத்தித்துறை பத்தியக் கறி வைப்பது எப்படி!! தயவு செய்து பகிருங்கள்… (Photos)
பத்தியக்கறி
தேவையான பொருட்கள்:
6 துண்டு மீன்கள் ( ஒட்டி, ஓரா, பாரை, சுறா, துள்ளுமண்டை மீன்கள் சிறந்தது).
1 முருங்கைக்காய்( மீன் இல்லாத கறி என்றால் முருங்கைக்காய், வாழைக்காய் பாதிக்கலாம்)
வெங்காயம் சிறிதளவு
6 உள்ளிப்பல்லு
கருவேப்பிலை சிறிது
புளி விதையில்லாதது ஒரு பெரிய பாக்களவு
3 செத்தல் மிளகாய்
2 மேசைக்கரண்டி கொத்தமல்லி
1 மேகரண்டி சின்னச்சீரகம்- நற்சீரகம்
1 தேக்கரண்டி மிளகு
சிறிய துண்டு வேர்க்கம்பு- சுக்கு
1/4 பாதி தேங்காய் சொட்டுகள்
1 துண்டு பருத்தித்துறைக் கருவாடு
உப்பு தேவையான அளவு

செய்முறை:
மீனை துப்பவாக்கி கழுவி எடுக்கவும். முருங்கைக்காயை துண்டுகளாக்கி கழுவி வைக்கவும்.
புளியை 2 தம்ளர் தண்ணீரில் கரைத்து எடுக்கவும்.
மல்லியை, மிளகு சீரகம் வேர்க்கம்பு இவற்றை வறுக்கவும். ஓரளவிற்கு சூடாக்கினால் போதும். கருக வறுக்க வேண்டாம்.

பின்பு மல்லியின் சூட்டினிலேயே செத்தல் மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
இங்கு உங்களுக்கு செய்முறையை காட்டிய பின்பு அந்தக் கறியை நாம் உண்ண வேண்டுமே! அதனால் 5 செத்தல் சேர்த்துள்ளேன். ஆனால் நோயாளருக்கு உண்ணக் கொடுப்பதானால் 3 செத்தலுக்கு அதிகமாக பாவிக்கக் கூடாது.

ஒரு பாத்திரத்தில் முதலில் மல்லியை இட்டு சூடாகும்வரை வறுக்கவும். பின்பு அதனுடன் மிளகு, சீரகம், செத்தல், சிறிய துண்டு வேர்க்கம்பு சேர்த்து வறுக்கவும்.
தேங்காய் சொட்டுகளையும், கருவாட்டையும் தணலில் அல்லது நெருப்பில் சுட்டு எடுக்கவும்.
தேங்காய் சொட்டு, கருவாடு இவற்றை Gas அடுப்பில் சுட்டு எடுத்துள்ளேன்.

சுட்ட தேங்காயும் கருவாடும்.

அம்மி உள்ளவர்கள் அம்மியில் அல்லது கிரைண்டரில் அரைக்கவும்.

கிரைட்டரில் முதலில் மல்லி, செத்தல் பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தூளாக்கி பின்பு தேங்காய் சொட்டு சேர்த்து அரைத்து பின்பு உள்ளி + தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

நல்ல விழுதாக அரைத்து எடுக்கவும்




வறுத்த மல்லி, மிளகு, சீரகம், செத்தல் இவற்றை கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து பின்பு அதனுள் தேங்காய் சொட்டுகளையும் அதன்பின்பு தோல் அகற்றிய உள்ளியையும் இட்டு அரைத்து எடுக்கவும். இறுதியாக தண்ணீர் சேர்த்து நல்ல பசையாக – விழுதாக அரைத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் இந்த அரைத்த கலவையை இட்டு அதனுள் வெங்காயம், பச்சைமிளகாய், முருங்கைக்காய், புளிக்கரைசல், உப்பு, மேலதிகமாக 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து அவியவிடவும்.
முருங்கைக்காய் நன்றாக அவிந்த பின்பு மீனைச் சேர்த்து 2-3 தடவை கறியை கொதிக்கவிடவும். இறுதியாக சுட்ட கருவாட்டை சிறு துண்டுகளாக உதிர்த்துப் போட்டு கருவேப்பிலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். கறியை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தண்ணீர் தன்மை அதிகமுள்ளதாக அல்லது கொஞ்சம் கட்டித்தன்மையான கறியாக சமைத்துக் கொள்ளவும்.
மிகச் சுவையான பத்தியக் கறி தயார். 4-5 பேருக்கு பரிமாறலாம். இங்கு எனது சட்டி சிறியதாக இருந்ததனால் படத்தில் காட்டிய 6 மீன்களையும் சேர்க்கவில்லை. 4 மீன்களை மட்டும் சேர்த்து சமைக்கக் கூடியதாக இருந்தது.
எனது வாழ்நாளில் முன்பு இதனைச் சமைத்ததில்லை. ஆனாலும் பலர் இந்த செய்முறையை தனிப்பட்ட செய்திகள் அனுப்பிக் கேட்டதனால் எனது மச்சாள் முறையான நெருங்கிய உறவினரிடம் இந்தச் செய்முறையைக் கேட்டு தெரிந்து கொண்டு இங்கு சமைத்துப் பகிர்ந்துள்ளேன்

எனது வாழ்நாளில் முன்பு இதனைச் சமைத்ததில்லை. ஆனாலும் பலர் இந்த செய்முறையை பகிரும்படி தனிப்பட்ட செய்திகள் அனுப்பிக் கேட்டதனால் எனது மச்சாள் முறையான நெருங்கிய உறவினரிடம் இந்தச் செய்முறையைக் கேட்டு தெரிந்து கொண்டு இங்கு சமைத்துப் பகிர்ந்துள்ளேன்.

