கட்டுநாயக்க – கொழும்பு வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் 48 வயதுடைய சமையற்கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுநாயக்க பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (16) புதன்கிழமை அதிகாலை 3.58 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குருநாகல், போயகனை, இசுருபெதேச பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் குறித்த உணவகத்தில் சமையல் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15) இரவுப் பணிகளை முடித்த பின்னர், குறித்த பணியாளர் உணவகத்தின் மேல் மாடியிலுள்ள தனது அறையில் தங்கியிருந்துள்ளார்.
அப்போது அங்குள்ள மற்றொரு அறையிலிருந்த ஊழியர் ஒருவருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தொடர்பில் இதுவரை இறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணியைக் கண்டறிவதற்காகச் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





