தமிழர் பகுதியில் D.I.G ஆன பொலிஸ் உயரதிகாரியையே மிரட்ட முயன்ற டிப்பர் சாரதி கைது….
அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் (D.I.G.) சுஜித் வெதமுல்ல Sujith Wedamulla அவர்களின் உத்தரவின் பேரில் அம்பாறை நகரில் முன்னெடுக்கப்பட்ட விசேட வாகன சோதனையின் போது, சட்டத்தை மதிக்காமல் நடந்துகொண்ட டிப்பர் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்படி அம்பாறை தலைமையகப் பொலிஸார் இந்த விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்தனர். நடவடிக்கையின் முன்னேற்றத்தை பார்வையிட பிரதிப் பொலிஸ்மா அதிபரும் கொண்டுவட்டுவான் குளம் அருகே அமைந்திருந்த சோதனைச் சாவடிக்கு சென்றிருந்தார்.
ஆரம்பத்தில் பொலிஸார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்ற சிறிய வாகனங்களையே சோதனை செய்ததை அவதானித்த அவர், உடனடியாக கனரக வாகனங்களையும் சோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த டிப்பர் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டபோது, சாரதி வாகனத்திலிருந்து இறங்காமல் ஆவணங்களை மட்டும் பொலிஸாரிடம் ஒப்படைத்தார். ஆவணங்களில் குறைபாடு இருந்ததால் பொலிஸார் அபராதச் சீட்டு வழங்கத் தயாரானபோது, சாரதி வாகனத்திலிருந்து இறங்கி பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை அவதானித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலையிட்டு, “பொலிஸார் கேட்டது ஓட்டுநர் உரிமமும் காப்புறுதி ஆவணமும்தான். பொலிஸாருடன் மோதலில் ஈடுபட வேண்டாம்” என்று அறிவுறுத்தினார். இருப்பினும் சாரதி, பிரதிப் பொலிஸ்மா அதிபருடனும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டு அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால், அவர் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் நீதிமருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் ‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளில், அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்த இந்த டிப்பர் சாரதிக்கு எதிராக பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு தாக்குதல் தொடர்பான நான்கு வழக்குகளும், மேலும் தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான மற்றொரு வழக்கும் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழு மேற்கொண்டு வருகிறது.

