கைத்துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!
பொலன்னறுவை மாவட்டம், எலகெரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எலகெரை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய நபராவார்.
சந்தேகநபர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே இராணுவச் சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றிருந்தார் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எலகெரை பகுதியில் நபர் ஒருவர் அனுமதியின்றித் துப்பாக்கியை வைத்துள்ளார் எனப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று சந்தேகநபரின் வீடு முற்றுகையிடப்பட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்கான 7 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ள ன.
அரச பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி ஓய்வுபெற்ற இவர், எதற்காக இந்தச் சட்டவிரோதத் துப்பாக்கியைத் தன்வசம் வைத்திருந்தார், இதன் பின்னணியில் ஏதேனும் குற்றச் செயல்கள் திட்டமிடப்பட்டிருந்ததா அல்லது தனிப்பட்ட பகை காரணமா என்ற கோணத்தில் எலகெரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

