அநுராதபுரத்தில் சிறுமியை சிதைத்த பிக்குவின் விந்தின் DNA யை உறுதிப்படுத்த இரத்த பரிசோதனை!!
அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை, எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, டி.என்.ஏ. (DNA) பரிசோதனைக்காகத் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு அநுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இரத்த மாதிரியை வழங்கியதன் பின்னர், அது தொடர்பான டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பிரதம நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்குப் பணித்துள்ளார்.
நிட்டம்புவ பொலிஸார் தாக்கல் செய்த மேலதிக அறிக்கையை கவனத்தில் கொண்டே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்
. நீதிமன்ற உத்தரவின்படி, முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட, இரத்தக் கறைகள் படிந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடைகள், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அந்த ஆடைகளில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில், சிறுமியின் ஆடைகளில் டி.என்.ஏ. அணுக்கள் (DNA Alleles) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய தேரரின் இரத்த மாதிரியைப் பெற்று, அந்த ஆடைகளில் கண்டெடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

