பதுளையில் கர்பிணித் தாய் ஸ்வர்ணமலாவும் சிசுவும் மரணம்!
மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரின் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹசலக, மினிப்பே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய எச். எம். ஸ்வர்ணமலா என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிசேரியன் மூலம் சிசு பிரசவிக்கப்பட்ட பின்னர், தாயின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக, அவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 06 ஆம் திகதி அதிகாலை 5.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை வழமைக்கு மாறாக அதிக வளர்ச்சியடைந்திருந்ததால் அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்திருந்தனர்.
சிசேரியன் அறுவை சிகிச்சை
அவ்வாறிருந்தும், அவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்குள்ள மருத்துவர்கள் சாதாரண பிரசவமாக அதனை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
சாதாரண பிரசவ முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, இறுதித் தருணத்திலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும், வைத்தியர்களின் அலட்சியத்தாலேயே இந்த 2 மரணங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் உறவினர்கள் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

