முஸ்லீம் – சிங்களவர்களால் அவிசாவளையில் பதற்றம் – பெருமளவான பொலிஸ், அதிரடிப்படையினர் குவிப்பு
அவிசாவளை, தல்துவ பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
தல்துவ நாப்பாவல பகுதியில் கடந்த வாரம் தனியார் பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாய்த்தரக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
எனினும் அன்றைய தினமே இந்த சர்ச்சை முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட சிலர் இன்று காலை பஸ்ஸின் சாரதி மீது நாப்பல நகரில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பஸ்ஸின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி நாப்பல பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

