புதினங்களின் சங்கமம்

இலங்கையை உலுக்கிய அனர்த்தத்தின் கோரம்; 481 ஆக உயர்ந்த பலி! 18 இலட்சம் பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 481 பேர் உயிரிழந்துள்ளதுடன், 345 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இதுவரையில் சுமார் 509,680 குடும்பங்களைச் சேர்ந்த 1,814,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக அதிகபட்ச உயிரிழப்பாக கண்டி மாவட்டத்தில் 118 பேர் பலியாகியுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக நுவரெலியாவில் 89 பேரும், பதுளையில் 83 பேரும், குருணாகல்லில் 56 பேரும், புத்தளத்தில் 29 மற்றும் மாத்தளை 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காணாமல் போனோர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கண்டி மாவட்டத்திலேயே 171 பேர் அதிகமாக காணாமல் போயுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக நுவரெலியாவில் 73 பேர் மற்றும் கேகாலையில் 41 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, அனர்த்தங்கள் காரணமாக புத்தளம் மாவட்டத்திலேயே 322,976 பேர் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 322, 342 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 306,585 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே நாடு முழுவதும் 1,967 வீடுகள் முழுமையாகவும், 50,173 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.